search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minjur"

    மீஞ்சூர் அருகே நகை கடை உரிமையாளர் வீட்டில் 60 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த ஹேமசந்திரா நகரைச் சேர்ந்தவர் கமல். நகை கடை நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த 17-ந் தேதி குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 60 சவரன் நகை, ரூ. 15 ஆயிரம், ¼ கிலோ வெள்ளி திருடு போயிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து கமல் மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    இப்பகுதியில் அடிக்கடி கொள்ளைபோவது குறித்து பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

    திருநின்றவூர் அடுத்த செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன்.திருநின்றவூர் சி.டி.எஸ் சாலையில் எலெக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    இன்று காலை கடையின் ஷெட்டர் பாதி திறந்து கிடந்தது. இது பற்றி ஸ்ரீனிவாசனுக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். உடனே அவர் கடைக்கு வந்து உள்ளே சென்ற பார்த்தார். அப்போது கடையில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து திருநின்றவூர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குபதிவு செய்து அந்த பகுதியில் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    செங்குன்றத்தை அடுத்த அழிஞ்சிவாக்கம் செல்வ விநாயகர் நகரை சேர்ந்தவர் வாசுதேவன். சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இவர் குடும்பத்துடன் செய்யாறில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

    இன்று காலை வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 21 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    மீஞ்சூர் அருகே 2 வாலிபர்கள் அடித்து கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த நாலூர் கலைஞர் நகரில் உள்ள கிணற்றில் 2 வாலிபர்கள் பிணம் கிடந்தது. இதை பார்த்து அப்பகுதி மக்கள் மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் கிடந்த 2 பேரின் உடல்களையும் மீட்டனர்.

    பின்னர் உடல்களை பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பிணமாக கிடந்தவர்கள் எண்ணூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல் கபூர். அவரது நண்பரான மீஞ்சூரை சேர்ந்த சம்பத்குமார் என்பதும் தெரியவந்தது.

    அவர்கள் உடல்களில் காயங்கள் இருப்பதால் யாராவது முன்பகை காரணமாக அடித்து கொலை செய்து உடல்களை கிணற்றில் வீசி சென்றனரா? அல்லது குடிபோதையில் இருவரும் கிணற்றின் சுவற்றின் மீது அமர்ந்து பேசி கொண்டிருந்த போது தவறி விழுந்து இறந்தனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மீஞ்சூர் அருகே இறால் பண்ணையில் வாலிபர் மர்ம மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த தாங்கல், பெரும்புலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணை உள்ளது. இங்கு மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த போராஸ் தாரா (வயது 26) என்பவர் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் இரவு இறால் பண்ணையில் போரஸ் தாரா தூங்கினார். காலையில் மற்ற தொழிலாளர்கள் வந்து பார்த்த போது அவர் படுக்கையிலேயே இறந்து கிடந்தார். இதுபற்றி காட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    போரஸ்தாரா எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. அவரை யாரேனும் கொலை செய்தனரா?அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மீஞ்சூர் அருகே வீட்டில் போதைப்பாக்கு தயாரித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பாக்கு தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மீஞ்சூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அத்திப்பட்டு சென்றார். விசாரணையில் முருகேசன் என்பவர் வீட்டில் இருந்து வியாபாரிகள் போதைப் பாக்கு பாக்கெட்டுகளை வாங்கிக் செல்வது தெரிய வந்தது.

    அதை தொடர்ந்து முருகேசன் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது, அங்கு போதைபாக்கு தயாரித்து பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.

    விற்பனைக்கு தயாராக இருந்த போதைப்பாக்கு பாக்கெட்டுகள், அதை தயாரிப்பதற்காக வைக்கப் பட்டிருந்த மூலப் பொருட்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். முருகேசன் கைது செய்யப்பட்டார்.

    போதைப்பாக்கு தயாரிக்கும் பொருட்களை எங்கு வாங்கினார்? குட்கா சப்ளை செய்யும் கும்பலுடன் முருகேசனுக்கு தொடர்பு உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மீஞ்சூர் அடுக்கு மாடி குடியிருப்பில் 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த நந்தியம் பாக்கம் ரெயில் நிலையம் அருகில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

    இங்கு 10 வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு வீட்டில் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை செய்யும் பிரபல் குடியிருக்கிறார். இன்னொரு வீட்டில் வட சென்னை அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர் வினோத் குடும்பத்துடன் வசிக்கிறார். மற்றொரு வீட்டில் தேவிகா (65) குடியிருக்கிறார்.

    நேற்று 3 வீடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டு பிரபல் வீட்டில் 50 ஆயிரம் பணம், 2 சவரன் நகை, வினோத் வீட்டில் 5 ஆயிரம் பணம், 1 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், தேவிகா வீட்டில் அரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    மற்ற 7 வீடுகளில் வெளியே தாழ்ப்பாள் போட்டு விட்டு கொள்ளை அடித்துள்ளனர்.

    இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மீஞ்சூரில் புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அய்யப்பன் கோவில் பின்புறம் உள்ள கிணற்றில் வாலிபர் ஒருவர் தலையில் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் கிடந்த வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் மீஞ்சூர் காலனி அண்ணாதெருவைச் சேர்ந்த லட்சுமணன்(27) என்பதும், வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.

    கடந்த 10-ந் தேதி இரவு லட்சுமணன் தன்னுடன் வேலை செய்யும் நண்பரின் மகள் திருமணத்திற்காக மீஞ்சூர் பாலகோட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை.

    அவரை பல இடங்களில் தேடி வந்த நிலையில் கிணற்றில் பிணமாக கிடந்துள்ளார்.

    லட்சுமணனுக்கு வருகிற 22-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர் தலையில் வெட்டு காயத்துடன் பிணமாக கிடந்துள்ளதால் அவரை யாராவது கொலை செய்துவிட்டு உடலை கிணற்றில் வீசினார்களா? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

    மீஞ்சூர் தெற்கு ஒன்றியத்தின் காட்டூர் கடப்பாக்கம், தத்தை மஞ்சி, அ.ரெட்டிப்பாளையம் வேளூர், காணியம்பாக்கம் ஆகிய 6 ஊராட்சிகளில் தி.மு.க. சார்பில் ஊராட்சி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. #DMK
    சென்னை:

    மீஞ்சூர் தெற்கு ஒன்றியத்தின் காட்டூர் கடப்பாக்கம், தத்தை மஞ்சி, அ.ரெட்டிப்பாளையம் வேளூர், காணியம்பாக்கம் ஆகிய 6 ஊராட்சிகளில் தி.மு.க. சார்பில் ஊராட்சி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு தலைமையிலும் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. வேளச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர் வாகை சந்திரசேகர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ்.மணி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், சுந்தரம், மீஞ்சூர் பேரூர் செயலாளர் மோகன்ராஜ், ஒன்றிய அவைத்தலைவர் தன்சிங், மாவட்ட பிரதிநிதிகள் தமிழரசன், பாளையம், முனுசாமி, ஒன்றிய துணை செயலாளர் கஸ்தூரி தசரதன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK

    மீஞ்சூர் அருகே மூதாட்டியை மீது தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த வல்லூர் நந்தனார் தெருவைச் சேர்ந்தவர் அன்னம்மாள் (80). இவர் வீட்டு முன்பு இரவு தூங்கி கொண்டிருந்தார். அதிகாலையில் 2 வாலிபர்கள் அன்னம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினர். இதில் அவரது கைமுறிந்தது. அவருக்கு திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல்லைச் சேர்ந்த ராமநாதன். மீஞ்சூரை அடுத்த வல்லூரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரை கைது செய்தனர்.

    மீஞ்சூர் அருகே மண்புழு வளர்ப்பு மையத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த பெரிய முல்லைவாயில், எட்டியம்மன் கோவில் தெருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மண்புழு வளர்ப்பு மையம் உள்ளது.

    இங்கு வளர்க்கப்படும் மண்புழுக்கள் மீஞ்சூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த மையம் சிறிய கொட்டகை அமைத்து செயல்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை மண்புழு வளர்ப்பு மையத்தின் மேற்கூரை திடீரென தீப்பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் கொட்டகை முழுவதும் எரிந்து சாம்பலானது.

    மர்ம நபர்கள் தீ வைத்து தப்பி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மீஞ்சூரில் ஆஸ்பத்திரி குடோனுக்கு தீவைத்த மர்மகும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூர்  பேரூராட்சி அலுவலகம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ஆஸ்பத்திரியில் பயன்படுத்தப்படாத பொருட்கள் லால்பகதூர் சாஸ்திரி தெருவில் உள்ள குடோனில் வைக்கப்பட்டு இருந்தது.

    நேற்று இரவு 12 மணியளவில் திடீரென குடோனில் இருந்து கரும் புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மீஞ்சூர் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

    பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

    தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

    தீப்படித்த குடோனில் மின் இணைப்பு கிடையாது. எனவே மர்ம நபர்கள் குடோனுக்குள் தீயை பற்ற வைத்து வீசி இருக்கலாம் என்று தெரிகிறது. தீ வைத்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ், தீப் பிடித்த குடோனை பார்வையிட்டார். மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மீஞ்சூர் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த வன்னிப்பாக்கம் காலனியை சேர்ந்தவர் மாயா. இவரது மகன் விஜி (வயது 25). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு முனிச்சம் பேடு கிராமத்தை சேர்ந்த நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட அனுப்பம்பட்டுக்கு சென்றார்.

    அப்போது விஜி தரப்பினருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறி இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

    இந்த தாக்குதலில் விஜிக்கு பலத்த வெட்டு விழுந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி விஜி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த மோதல் தொடர்பாக நேற்றே அனுப்பம்பட்டு சின்ன காலனியை சேர்ந்த பழனி, கவிஅமுதன், கார்த்திக், சரண்ராஜ், அருண், உதயகுமார், தீபக் ஆகிய 7 பேரை கைது செய்து இருந்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.

    விஜி இறந்ததையடுத்து வன்னிப்பாக்கம் பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மீஞ்சூர் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மகன் லாரி மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. அலுவலகத்தில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இரவது மகன் கார்த்திக் (23) வட சென்னை அனல் மின்நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார் நேற்று இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    மீஞ்சூரை அடுத்த நாலூர் ஏரிக்கரை அருகே வரும்போது லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திக் உயிரிழந்தார். மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.

    ×