search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "person death"

    திருப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் 2 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பூம்புகார் நகரை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன் (வயது 65). இவரது நண்பர் மொக்கையன் (55). இருவரும் நேற்று திருப்பூர் சந்தைபேட்டைக்கு வந்தனர். அங்கு வேலை முடிந்து இரவு 10.30 மணிக்கு மேல் பூம்புகார் நகருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    திருப்பூர்- பல்லடம் சாலையில் சென்றபோது முன்னால் லாரி சென்றது. லாரியை பின் தொடர்ந்தே சவுந்திரபாண்டியன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். ஒரு இடத்தில் லாரி திடீரென வேகம் குறைந்தது. இதனை எதிர்பார்க்காத சவுந்திரபாண்டியன் லாரியின் பின்பக்கம் மோதினார்.

    இதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்ட நண்பர்கள் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கினர். லாரி சக்கரம் இருவரது உடல்கள் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சவுந்திரபாண்டியனும், அவரது நண்பர் மொக்கையனும் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் ரங்கநாதன் (33) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மீன்சுருட்டி அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மீன் வாங்க சென்றவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள பாகல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையன்(45). இவர் நேற்று காலை வீட்டிற்கு மீன் வாங்குவதற்காக தனது மொபட்டில் பாப்பாக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மீன்சுருட்டி அருகேயுள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் கருப்பையன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து ஜெயங்கொண்டம்  இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் வழக்குபதிந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சென்னை பாடியை சேர்ந்த ஆறுமுகம் மகன் நல்லதம்பி (20) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றார்.
    சேத்துப்பட்டில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியம் நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன், விவசாயி. இவரது மனைவி காந்திமதி. இவர்களின் மகன் ரவி (வயது 12), நரசிங்கபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

    அதே பகுதியை சேர்ந்தவர் விநாயகம், விவசாயி. இவரது மனைவி சிவசக்தி. இவர்களின் மகன் ரூபேஷ் (10), 6-ம் வகுப்பு படித்து வந்தான். விடுமுறை தினமான நேற்று ரவியும், ரூபேசும் நரசிங்கபுரம் பெரிய ஏரியில் குளிக்க சென்றனர்.

    அந்த ஏரியில் வண்டல் மண் எடுப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டிருந்தன. தற்போது பெய்த மழையால் பள்ளம் இருந்த இடமும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் குளிப்பதற்காக இறங்கிய 2 சிறுவர்கள் அந்த பள்ளம் இருந்த இடம் தெரியாததால் அதில் இறங்கிவிட்டனர்.

    அவர்களுக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. இதனால் நீரில் மூழ்க தொடங்கினர். இதனிடையே குளிக்க சென்ற சிறுவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர்.

    அப்போது ஏரியின் கரையில் சிறுவர்கள் 2 பேரின் சட்டை துணிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், ஏரியில் இறங்கி தேடி பார்த்தனர்.

    பின்னர் சிறுவர்களின் உடலை அவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஏரியில் வண்டல் மண் எடுத்து பெரிய பள்ளத்தில் 2 சிறுவர்கள் மூழ்கி பலியானதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நரசிங்கபுரத்தில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ், சேத்துப்பட்டு தாசில்தார் அரிதாஸ், வருவாய் ஆய்வாளர் பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தபாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இறந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு வருவாய்த்துறை மூலம் அரசு நிதி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பின்னர் ரவி மற்றும் ரூபேசின் உடலை பெற்றோர்கள் வீட்டிற்கு கொண்டு சென்றனர். போலீசாரும், வருவாய்த்துறையினரும் சிறுவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியதால் அதனை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அதனை தொடர்ந்து 2 சிறுவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    கனகசெட்டிகுளத்தில் சாலையை கடக்க முயன்றவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து போனார்.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டை அடுத்த கனக செட்டிகுளம் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று இரவு 50வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் அந்த நபர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார். இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுவை வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விபத்தில் பலியானவர் யார்- எந்த ஊர் என்பது குறித்தும் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    3 திருமணம் செய்த டிரைவர் கள்ளக்காதலி வீடு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாராபுரம்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி பெரிச்சி பாளையத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 45). டிரைவர். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கேரளா சென்றார். அங்கு ரெமோ என்ற பெண்ணை திருமணம் செய்தார். 2 குழந்தை கள் உள்ளனர்.

    இந்நிலையில் மனைவியை விட்டு விட்டு தஞ்சை சென்றார். அங்கு உஷா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்தார். அவரையும் விட்டு விட்டு தாராபுரம் வந்தார். இங்குள்ள நஞ்சியம் பாளையத்தில் தங்கினார். அப்போது லட்சுமி என்ற பெண்ணை 3-வதாக திருமணம் செய்தார். இங்குள்ள நாடார் தெருவில் வசித்து வந்த ராஜாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. நேற்று இரவு கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றார். அதன்பின்னர் காலையில் ராஜா காயங்களுடன் ரோட்டில் மர்மமான முறையில் கிடந்தார். 

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் தாராபுரம் போலீசுக்கு புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது கள்ளக்காதலியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜா அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அன்னமங்கலத்தில் கடந்த 20ந் தேதி ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது. இதில் மாடு முட்டி காயமடைந்தவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர்மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலத்தில் கடந்த 20-ந் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 12 பேர் பார்வையாளர்கள் 12 பேர் மொத்தம் 24 பேர் காயமடைந்தனர். இதில் தொண்டமாந்துறையை சேர்ந்த அந்தோணிசாமி (வயது50) என்பவர் மாடு முட்டி காயமடைந்த நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அந்தோணிசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு அன்னம்மாள் என்ற ஒரு மனைவியும், சாந்தி, சவரியம்மாள், ஜோஷி என்ற மூன்று பெண் பிள்ளைகளும் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி விட்டது. அந்தோணிசாமி வெளிநாட்டில் (துபாய்) வேலை செய்து வந்தார். தற்சமயம் விடுமுறையில் ஊருக்கு வந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×