குடியாத்தம் அருகே போலீஸ்காரர் அடித்துக் கொலை
குடியாத்தம்:
குடியாத்தம் அருகே உள்ள மோடிகுப்பம் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜசேகரன் (வயது29). மத்திய ரிசர்வ்படை போலீஸ்காரர் கடந்த 5 ஆண்டுகளாக சத்தீஷ்கர் மாநிலத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.
கடந்த 16-ந்தேதி இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பஞ்சா, முருகேசன், பாரத், அமரேசன் ஆகியோர் இடையே முன்விரோதம் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அவர்கள் 4 பேரும் சேர்ந்து ராஜசேகரை உருட்டு கட்டையால் தாக்கினர்.
இதில் ராஜசேகரன் படுகாயமடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று காலை ராஜசேகரன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஞ்சா, முருகேசன், பாரத், அமரேசன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் மோடிகுப்பத்தில் பதட்டம் நிலவுகிறது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.