செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே புளிய மரத்தின் மீது கார் மோதல்: 3 பேர் பலி

Published On 2017-09-17 17:24 GMT   |   Update On 2017-09-17 17:24 GMT
கள்ளக்குறிச்சி அருகே இன்று காலை புளிய மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள நகர பாடி கிராமத்தை சேர்ந்தவர் சம்பந்தம் (வயது 42) விவசாயி. இவரது மனைவி தனபாக்கியம் (38). சம்பந்தத்தின் தாய் மதனவள்ளி உடல்நலம் சரியில்லாமல் இருந்தார்.

இதையொட்டி அவரை சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல சம்பந்தம் முடிவு செய்தார். அதன்படி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு சம்பந்தம், தனபாக்கியம், மதனவள்ளி மற்றும் அதே பகுதியை சேர்ந்த உறவினர்கள் கலியமூர்த்தி (37), மணிவண்ணன், தேவகி, ஆதாம் உள்பட 9 பேர் ஒரு காரில் நகரபாடி கிராமத்தில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

அங்கு மதனவள்ளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து கேரளாவில் இருந்து சம்பந்தம் உள்பட 9 பேரும் அதே காரில் நேற்று இரவு ஊருக்கு புறப்பட்டனர். காரை டிரைவர் ஆதாம் ஓட்டினார்.

அந்த கார் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த வி.அலம்பலத்தில் உள்ள சேலம்-வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. அப்போது கார் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து ரோட்டில் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் காரின் முன்பக்கம் முழுவதும் சேதம் அடைந்தது.

இந்த விபத்தில் காரில் இருந்த சம்பந்தம், அவரது மனைவி தனபாக்கியம் மற்றும் உறவினர் கலியமூர்த்தி ஆகிய 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

சம்பந்தத்தின் தாய் மதனவள்ளி உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

விபத்தில் காயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News