செய்திகள்

செஞ்சி அருகே பள்ளி நிர்வாகி கழுத்தை அறுத்து கொலை

Published On 2017-09-15 11:37 GMT   |   Update On 2017-09-15 11:37 GMT
செஞ்சி அருகே பள்ளி நிர்வாகி கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேல்மலையனூர்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது கடலி கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி(வயது 85). இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து ஓய்வுபெற்றார்.

அதன்பின்னர் அவர் கடலி கிராமத்தில்ஆர்.சி.தொடக்கப்பள்ளி நடத்தி வந்தார். இந்த கிராமத்தில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று மதியம் அவர் வீட்டில் இருந்தார். அப்போது மர்மகும்பல் அவர் வீட்டுக்குள் புகுந்தனர். அவரை தாக்கி கத்தியால் சரமாரியாக குத்தினார்கள்.

பின்னர் சின்னசாமியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வளத்தி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் குமரபாலன், சப்-இன்ஸ் பெக்டர் குணபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். கொலையில் துப்புதுலக்க விழுப்புரத்தில் இருந்து தடயவியல் உதவி இயக்குனர் சண்முகம் வரவழைக்கப்பட்டார். அவர் தடயங்களை சேகரித்தார்.

மேலும் விழுப்புரத்திலிருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு 3 கிலோ மீட்டர் தூரம் ஓடி நீலம்பூண்டி பஸ்நிறுத்தம் அருகே நின்றது.

கொலையாளிகள் இந்த வழியாக தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

கொலை செய்யப்பட்ட பள்ளி நிர்வாகி சின்னசாமிக்கு அன்னம்மாள் என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். சின்னசாமி தன் மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவருக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.

மேலும் சின்னசாமி வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். எனவே அவர் சொத்து தகராறு காணரமாக கொலை செய்யப்பட்டாரா? வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் அவரை கொலை செய்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை தொடர்பாக செஞ்சி டி.எஸ்.பி.ரவி சந்திரன் உத்தரவின் பேரில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படை போலீசார் செஞ்சி, மேல்மலைனூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னசாமி வீட்டுக்கு யார்? யார் வந்து செல்வார்கள் என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News