செய்திகள்

நடுரோட்டில் அரசு பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை

Published On 2017-09-13 07:22 GMT   |   Update On 2017-09-13 07:22 GMT
நடுரோட்டில் அரசு பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு, செதில் பாக்கத்தில் வசித்து வருபவர் முருகன். இவரது மனைவி லட்சுமி (வயது 29). சென்னை எழிலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இருவரும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கணவருடன் ஏற்பட்ட தகராறில் கடந்த சில நாட்களாக லட்சுமி, சென்னை அஸ்தினாபுரத்தில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

நேற்று மாலை செதில் பாக்கத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு லட்சுமி வந்தார். அப்போது கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து லட்சுமி வெளியே சென்றார். நடுரோட்டில் நடந்து சென்ற போது லட்சுமி திடீரென தனது கைப்பையில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடல் கருகிய லட்சுமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இன்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News