செய்திகள்

மன்னார்குடியில் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு தீ வைப்பு: பதட்டம் - போலீஸ் குவிப்பு

Published On 2017-09-12 09:50 GMT   |   Update On 2017-09-12 09:50 GMT
மன்னார்குடியில் இன்று அதிகாலை 4 மணியளவில் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோபால சமுத்திரம் வீதியில் அ.தி.மு.க. மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முன் கீற்று கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.

கோடை காலங்களில் இந்த கீற்று கொட்டகையில் மோர், தண்ணீர் பந்தல் அமைக்கப்படும்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் அ.தி.மு.க. அலுவலகத்தின் கீற்று கொட்டகைக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதனை பார்த்த அப் பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் கொட்டகை முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.

அ.தி.மு.க. அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன். வாசுகிராம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.டி.குமார் , தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சேரன் குளம் மனோகரன், மன்னார்குடி நகர துணை செயலாளர் அன்பு செல்வன் மற்றும் அ.தி.மு.க.வினர் பார்வையிட்டனர்.

இது குறித்து மன்னார் குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜான் ஜோசப், மன்னார்குடி டி.எஸ்.பி. அசோகன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

கைரேகை, தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

அ.தி.மு.க. அலுவலகத்தை போலீசார் ஆய்வு செய்த போது அதன் அருகே உள்ள இந்தியன் வங்கியில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி.கேமிரா துணியால் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. எனவே திட்டமிட்டே இந்த தீ வைப்பு நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுவதால் கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோர் சென்னை சென்று விட்டனர். இதனால் அலுவலக நிர்வாகி சத்திய மூர்த்தி போலீசில் புகார் செய்தார். அதில் தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர் எஸ். காமராஜ், நகர செயலாளர் ஆனந்தராஜ் ஆகிய 2 பேர் தூண்டுதலின் பேரில் கட்சி அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.

அ.தி.மு.க. அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தால் மன்னார்குடியில் பதட்டம் நிலவுகிறது.போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

அ.தி.மு.க. பொதுக்குழு இன்று நடைபெறும் சூழ்நிலையில் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News