செய்திகள்

வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் ஒரே ஒரு மாணவர் சேர்க்கை

Published On 2017-09-11 11:43 GMT   |   Update On 2017-09-11 11:43 GMT
வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் மத்திய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒரே ஒரு மாணவர் மட்டும் சேர்க்கப்பட்டு வகுப்பு தொடங்கியது.
வேலூர்:

வேலூர் சி.எம்.சி. மருத்துவ கல்லூரி நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டு நிறுத்தியது.

நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சி.எம்.சி. தனியாக நுழைவுத் தேர்வு நடத்தும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்முக தேர்வு மூலம் சேர்க்கபடுவார்கள் என அறிவித்தது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சி.எம்.சி. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு வருகிற அக்டோபர் 11-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

சி.எம்.சி. மருத்துவ மாணவர் சேர்க்கையை நிறுத்தியதால் அங்கு இந்த ஆண்டு 100 எம்.பி.பி.எஸ். சீட், 61 முதுநிலை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவர்களுக்கான இடம் காலியாக உள்ளது.

இந்த நிலையில் சி.எம்.சி. மருத்துவ கல்லூரியில் மத்திய அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் ஒரே ஒரு மாணவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவரது பெயர் சித்தாந்த் நாயர் (வயது 18). இவரது தந்தை ராஜேஷ் நாயர் ராணுவவீரர். கடந்த 2001-ம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தார்.

சித்தாந்த் நாயர் மும்பையில் பள்ளிபடிப்பை முடித்துள்ளார்.

இன்று ஒரு மாணவருடன் சி.எம்.சி.யில் முதலாமாண்டு வகுப்பு தொடங்கியது. இது குறித்து சி.எம்.சி. தரப்பில் கூறியதாவது:-

சி.எம்.சி. மருத்துவ கல்லூரிக்கு மத்திய அரசுடன் ஒப்பந்தம் ஒன்று உள்ளது. அதன்படி நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் பிள்ளைகளுக்கு ஒரு சீட்டு வழங்க வேண்டும்.

மத்திய அரசு தகுதியானவர்களை தேர்வு செய்து அனுப்பி வைக்கும் அவர் நேரடியாக சேர்க்கப்படுவார். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் சித்தாந்த் நாயர் சேர்க்கப்பட்டுள்ளார் என்றனர்.
Tags:    

Similar News