செய்திகள்

தொடர் மழை: செம்பரம்பாக்கம்-புழல் ஏரியில் நீர்மட்டம் அதிகரிப்பு

Published On 2017-08-18 09:26 GMT   |   Update On 2017-08-18 09:26 GMT
தொடர் மழை காரணமாக வறண்டு கிடந்த செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
பூந்தமல்லி:

தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உள்ளதால் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒருவாரமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு கனமழை பெய்கிறது.

நேற்று மாலையும் இடி-மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழை அதிகாலை வரை நீடித்தது.

தொடர் மழை காரணமாக வறண்டு கிடந்த செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏரியில் 101 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. (மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி).ஏரிக்கு 186 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. 12 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கடந்த வாரம் செம்பரம்பாக்கம் ஏரியில் 73 மி.கன அடி தண்ணீர் இருந்தது. ஒரு வாரத்தில் 28 மி.கனஅடி நீர் அதிகரித்து உள்ளது. மழை நீடிக்கும் பட்சத்தில் தண்ணீர் இருப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று மட்டும் செம்பரம்பாக்கம் பகுதியில் 50 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

புழல் ஏரி ஏற்கனவே முற்றிலும் வறண்டு இருந்தது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக புழல் ஏரியில் 17 மி.கன அடியாக நீர் இருப்பு அதிகரித்து உள்ளது. ஏரிக்கு 28 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பூண்டி ஏரி பகுதியில் அதிக அளவு மழை இல்லை. இதனால் ஏரியில் நீர்மட்டம் அதிகரிக்கவில்லை. சோழவரம் முற்றிலும் வறண்டு காணப்படுகிறது.

Tags:    

Similar News