செய்திகள்

தமிழகம் முழுவதும் பலத்த மழை: சென்னையில் விடியவிடிய கொட்டியது

Published On 2017-08-18 05:09 GMT   |   Update On 2017-08-18 05:10 GMT
தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஆங்காங்கே கனமழை பெய்துள்ளது. நள்ளிரவிலும் தொடர்ந்து மழை விடிய விடிய பெய்து கொண்டே இருந்தது. இந்த மழை இன்றும் நீடிக்கும் என்று வானிலை மைய அதிகாரி கூறினார்.
சென்னை:

தமிழகம்-புதுவையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காலகடத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மழை பெய்தாலும், வட தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன் பிறகு சிறு தூறலாக ஆரம்பித்த மழை போகப்போக பலத்த மழையாக பெய்தது.

சென்னை கே.கே.நகர், கோயம்பேடு, அம்பத்தூர், ஆவடி, கீழ்ப்பாக்கம், எழும்பூர், கொளத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, மயிலாப்பூர், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை உள்பட சென்னையின் பல பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்துக்கு கனமழை பெய்தது.

அதன்பிறகு தொடர்ந்து விட்டு விட்டு மழை தூறல் விழுந்து கொண்டே இருந்தது. இரவு 9 மணிக்கு பிறகு மீண்டும் கனமழை விட்டு விட்டு பெய்தது. நள்ளிரவிலும் தொடர்ந்து மழை விடிய விடிய பெய்து கொண்டே இருந்தது.


இதனால் சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பல இடங்களில் பாதிக்கப்பட்டது.

சென்னையின் நீர்பிடிப்பு பகுதியான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் பகுதிகளிலும் கனமழை பெய்ததால் ஏரிக்கு மழைநீர் வந்துகொண்டிருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு மட்டும் 186 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

இதேபோல் தமிழ்நாடு முழுவதும் பரவலாக நேற்றிரவு மழை பெய்துள்ளது. மேட்டூர் அணை பகுதியில் பெய்த மழையால் 21947 கனஅடி மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டி உள்ளது.

இதுபற்றி வானிலை மைய அதிகாரி கூறும்போது, நேற்றிரவு தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஆங்காங்கே கனமழை பெய்துள்ளது. இந்த மழை இன்றும் நீடிக்கும் என்று கூறினார்.
Tags:    

Similar News