செய்திகள்
சுகேஷ்

மோசடி வழக்கு விசாரணை: இடைத்தரகர் சுகேஷ் கோவை கோர்ட்டில் இன்று ஆஜர்

Published On 2017-08-17 06:45 GMT   |   Update On 2017-08-17 06:45 GMT
மோசடி வழக்கு விசாரணைக்காக இடைத்தரகர் சுகேஷை பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்த டெல்லி போலீசார் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
கோவை:

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் பெற்ற புகாரில் இடைத்தரகர் சுகேசை டெல்லி போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.

இடைத்தரகர் சுகேஷ் மீது தமிழகத்தில் பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கோவை கணபதியை சேர்ந்த ராஜகோபால். என்பவர் சமையலறை உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவரை கடந்த 2010-ம் ஆண்டு தொடர்பு கொண்ட சுகேஷ் கர்நாடக முதல் மந்திரி அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி டெண்டர் எடுத்து தருவதாக ரூ. 2 லட்சம் பெற்று மோசடி செய்தார்.

இது குறித்து ராஜகோபால் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இடைத்தரகர் சுகேஷ், இதற்கு உடந்தையாக இருந்த சுகேசின் தந்தை சந்திரசேகர்ராவ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சுகேசை கைது செய்தனர்.

பின்னர் கோவை ஜே.எம். 2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கு விசாரணையின் போதே சுகேஷ் ஜாமீன் பெற்றார்.

அதன் பின்னர் நடந்த விசாரணையில் சுகேஷ் ஆஜராகவில்லை. இதனால் கோவை கோர்ட் கடந்த ஜனவரி 1-ந் தேதி பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது.

இதனையடுத்து திகார் சிறையில் உள்ள சுகேசை டெல்லி போலீசார் கடந்த ஜூன் 8-ந் தேதி பலத்த பாதுகாப்புடன் ரெயில் மூலம் அழைத்து வந்து ஜே.எம். 2-ல் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில் டெல்லி போலீசார் கடைசியாக கடந்த 3-ந்தேதி சுகேசை ஜே.எம்.2-ல் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜ்குமார் இன்று சுகேசை ஆஜர்படுத்தும் படி உத்தரவிட்டனர்.

இதற்காக டெல்லி போலீசார் 5-வது முறையாக சுகேசை டெல்லியில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் காலை 5.30 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். காலை 11 மணிக்கு ஜே.எம். 2 கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.



Tags:    

Similar News