செய்திகள்

காவிரி ஆற்றில் மணல் அள்ள இடைக்கால தடை: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-08-17 03:53 GMT   |   Update On 2017-08-17 03:53 GMT
காவிரி ஆற்றில் மணல் அள்ள இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

முசிறியை சேர்ந்த சீனிவாசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது-

கட்டுமான பணிகளுக்காக மணல் குவாரிகள் மூலம் காவிரி ஆற்றில் மணல் அள்ளப்படுகிறது. குறிப்பாக குளித்தலை பகுதியில் பாலங்கள் அமைந்துள்ள இடத்தில் தான் அதிக அளவு மணல் அள்ளப்படுகிறது . அதனால் அந்த பாலங்கள் செயல் இழந்து போகின்றன. விதிகளை மீறி காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதால், நீரோட்டம் என்பது இல்லாமல் போகிறது.

மதுரை, சிவகங்கை போன்ற மாவட்டங்களுக்கு இங்கு இருந்து தான் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மணல் அதிகமாக அள்ளுவதால் தண்ணீரின் வரத்தும் குறைந்து எங்கள் பகுதியில் குடிநீருக்கே பிரச்சினை ஏற்படும் நிலை உருவாகி வருகிறது.

எனவே எங்கள் பகுதியில் காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், கரூர் மாயனூரில் இருந்து திருச்சி வரை காவிரி ஆற்றில் உள்ள குவாரிகளில் மணல் அள்ள இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதுதொடர்பாக தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 28-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News