செய்திகள்

திருச்சி அருகே அரசு கல்லூரி விடுதியில் காதல் தோல்வியால் என்ஜினீயரிங் மாணவி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2017-08-08 09:45 GMT   |   Update On 2017-08-08 09:45 GMT
திருச்சி அருகே அரசு கல்லூரி விடுதியில் காதல் தோல்வியால் என்ஜினீயரிங் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி:

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள மூலப் பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகள் கவிபாரதி (வயது 20). திருச்சி சேதுராப்பட்டியில் உள்ள அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு என்ஜினியரிங் பயின்று வந்தார். தினமும் கடலூர் சென்று வர முடியாது என்பதால் கல்லூரி விடுதியிலே தங்கி படித்து வந்தார்.

மாணவி நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று விட்டு விடுதிக்கு திரும்பினார். இரவு 9 மணியாகியும் கவிபாரதி சாப்பிட உணவு விடுதிக்கு வரவில்லை. இதனால் சந்தேக மடைந்த விடுதியில் உள்ள சகமாணவிகள் அவரின் அறைக்கு சென்று பார்த்தனர்.

அப்போது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கவிபாரதி பிணமாக கிடந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் விடுதி காப்பாளரிடம் இதுகுறித்து கூறினர். விடுதி காப்பாளர் மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து மணிகண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அரசு விடுதிக்கு சென்ற போலீசார் கவிபாரதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் மாணவியும் கல்லூரியில் பயிலும் மற்றொரு மாணவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட காதலன் பிரிந்த தகராறில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் மாணவி இறந்தது குறித்து பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. மகள் இறந்தது குறித்து அறிந்த அதிர்ச்சிடைந்த அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி இறந்ததற்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News