செய்திகள்

அம்மாபேட்டை அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை: 6 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2017-07-25 10:46 GMT   |   Update On 2017-07-25 10:46 GMT
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
அம்மாபேட்டை:

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த வடபாதியை சேர்ந்தவர் சிகாமணி. இவரது மகன் அருமைநாதன் என்ற ராஜசிம்மன் (வயது 42). அ.தி.மு.க. பிரமுகரான இவர் கீழகோவில்பத்து ஊராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவராக பணியாற்றியவர். தற்போது வடபாதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் ராஜசிம்மன் இன்று காலை தனது காரில் சாலியமங்கலம் அருகே உள்ள திருபுவனம் சென்றார். அப்போது சாலியமங்கலம் ரெயில்வே கேட் மூடப்பட்டு இருந்ததால் காரை நிறுத்திவிட்டு அருகில் உள்ள பெட்டிக்கடைக்கு சிகரெட் வாங்க சென்றார். அப்போது அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 பேரும், காரில் 4 பேரும் வந்தனர். அவர்கள் திடீரென அரிவாளுடன் ராஜசிம்மனை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டினர்.இதில் தலை மற்றும் இடது கையில் காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதனை கண்ட கொலையாளிகள் 6 பேரும் வாகனங்களில் ஏறி மாற்று பாதை வழியாக தப்பி சென்று விட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பாபநாசம் டி.எஸ்.பி. செல்வராஜ், அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலையுண்ட ராஜசிம்மன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து முன் விரோதம் காரணமாக ராஜசிம்மன் கொலை செய்யப்பட்டாரா? இந்த கொலையில் ஈடுபட்டது கூலிப்படையா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தினர். இந்த கொலையில் ஈடுபட்ட 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

ராஜசிம்மனின் தந்தை சிகாமணி அம்மாபேட்டை ஒன்றிய செயலாளராக பணியாற்றியவர் ஆவார். கொலையுண்ட ராஜசிம்மனுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொலை சம்பவம் சாலியமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News