குடிபோதையில் தகராறு: கணவர் கை-கால்களை கட்டி கழுத்தை இறுக்கி கொன்ற பெண்
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த மண்ணாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 44). விவசாயி. இவரது மனைவி தனலட்சுமி (35).
இந்த தம்பதிக்கு புவனேஸ்வரி(18) என்ற மகளும் கணபதி(13), வசந்தகுமார் (10) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இதில் புவனேஸ்வரிக்கு திருமணம் ஆகிவிட்டது. கணபதியும் வசந்தகுமாரும் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
முருகேசனுக்கு குடிப் பழக்கம் இருந்து வந்தது. தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் மகன்களை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்தார். இதுதொடர்பாக கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கணவனின் குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்து வந்தார். ஆனாலும் அவர் கேட்கவில்லை. நேற்று இரவும் முருகேசன் நன்றாக குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.
அப்போது அவருக்கும் தனலட்சுமிக்கும் இடையே பயங்கர சண்டை மூண்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தனலட்சுமி இனிமேலும் கணவனை விட்டு வைத்தால் நம்மை நிம்மதியாக வாழவிடமாட்டார். அவரை தீர்த்து கட்டுவதே சரியான தீர்வு என்று நினைத்தார். நேற்று இரவு முருகேசனும் மகன்களும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவு நேரத்தில் தனலட்சுமி எழுந்து தூங்கிக் கொண்டிருந்த கணவனின் கை-கால்களை கயிற்றால் கட்டினார். பின்னர் துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கினார். இதில் முருகேசன் சிறுது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதனை தொடர்ந்து இன்று காலை வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் தனலட்சுமி தான் கணவரை கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார்.
பின்னர் வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் கொலை வழக்குபதிவு செய்து கொலையுண்ட முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் தனலட்சுமியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
குடிபோதையில் தகராறு செய்து வந்த கணவரை மனைவி கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் வாழப்பாடி பகுதியில் அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.