ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூவரைவென்றான் பகுதியில் இன்று அதிகாலை மணல் பாரம் ஏற்றிய லாரி சென்றது. அங்குள்ள ஓடை பாலம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்தவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் நத்தம்பட்டி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் பலியானவர் பெயர் மனோகரன் (வயது 54) என்பதும் கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அருகே உள்ள அருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. லாரி உரிமையாளர் மற்றும் டிரைவரான மனோகரன் மணல் பாரம் ஏற்றிக் கொண்டு ராஜபாளையம் சென்றபோது தான் விபத்து ஏற்பட்டுள்ளது.
ராஜபாளையம் அருகே உள்ள சொக்கலிங்க புரத்தைச் சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன் (40) இவர் வன்னியம்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, எதிரே வந்த டிராக்டர் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த செந்தாமரை கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.