நாகர்கோவிலில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.200 அபராதம்
நாகர்கோவில்:
நாகர்கோவில் நகராட்சியில் தெருக்களில் குப்பைகளை கொட்டினால் அபராதம் வசூலிக்க நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
குப்பைகளை பொது இடம் மற்றும் தனியார் இடங்களில் கொட்டினாலோ, வாகனங்களில் தூக்கி எறிந்தாலோ, கடை மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து கழிவுகளை பொது இடங்களில் கொட்டினாலோ ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.
கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத கழிவுகளாக அதற்குரிய பெட்டிகளில் தரம் பிரித்து கொடுக்காமல் இருந்தால், தனிநபர் வீடுகளுக்கு ரூ.100-ம், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.1000, மொத்த கழிவு உற்பத்தியாளர்கள் ரூ.2000-ம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கட்டிட கழிவுகளை பிரித்து கொடுக்காமல் இருந்தால் ரூ.5000, தோட்டம் மற்றும் மரக் கிளைகள் கழிவுகளை பிரித்து வழங்காமல் இருந்தால் ரூ.200, சமுதாய கழிவுகள் சேகரிக்கும் பெட்டிகளுக்கு (பொது குப்பை தொட்டி) வெளியே கொட்டினால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.
கழிவுகளை எரித்தால், தனிநபர்களின் இடத்திற்குள் ரூ.200, தனிநபர்கள் பொது இடங்களில் எரித்தால் ரூ.500, நிறுவனங்களுக்கு ரூ.1000, மீன், கோழி, இறைச்சி கழிவுகளை தனியாக இருப்பு வைத்து பிரித்து வைக்காமலிருப்பதற்கு ரூ.1000, கழிவுகள் சேகரிக்கும் கூடையோ, பெட்டியோ வைக்காமல் விற்பனை செய்பவர், நடமாடும் விற்பனையாளர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.
வியாபாரம் செய்பவர் நடமாடும் விற்பனையாளர் கழிவுகளை தனியாக பிரித்து தராமலிருந்தால் ரூ.200, பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடந்து முடிந்த 24 மணி நேரத்திற்குள் சுத்தம் செய்யாமலிருந்தால் சுத்தம் செய்வதற்கான வைப்புத் தொகையை பிடித்தம் செய்து கொள்வதுடன் ரூ.2000 அபராதமும் விதிக்கப்படும்.
இந்த கட்டண விபரம் ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வருவதாக நகராட்சி ஆணையர் சரவணக்குமார் தெரிவித்தார்.