செய்திகள்

இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை: திருப்பூர் தென்னம்பாளையம் மாட்டு சந்தை வெறிச்சோடியது

Published On 2017-05-29 12:25 GMT   |   Update On 2017-05-29 12:25 GMT
இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு தடை விதித்தது எதிரொலியாக திருப்பூர் தென்னம்பாளையம் மாட்டு சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் தென்னம் பாளையத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி, உடுமலை, பல்லடம், தாராபுரம், வெள்ளக்கோவில், காங்கயம், மற்றும் கோவை மாவட்டம் சூலூர், சுல்தான் பேட்டை, ஈரோடு மாவட்டத்தில் இருந்து பெருந்துறை, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாடுகளை விற்பனை செய்ய விவசாயிகள் வேன்களில் கொண்டு வருகிறார்கள். மதியம் 3 மணி முதல் இரவு 7 மணி வரை சந்தை நடைபெறும்.

இந்த நிலையில் மத்திய அரசு, இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை செய்துள்ளது.

இதனால் தென்னம்பாளையத்தில் இன்று நடந்த மாட்டு சந்தைக்கு மாடுகளின் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. காலை 11 மணி நிலவரப்படி வெறும் 50 மாடுகளே விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்தனர். மாடுகளின் வரத்து குறைந்ததால் அதை வாங்க வந்த வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.

இதுபற்றி மாட்டு வியாபாரி ஒருவர் கூறும் போது, ‘ தென்னம்பாளையம் மாட்டு சந்தைக்கு வாரந்தோறும் குறைந்தது 1000 மாடுகள் வரை விற்பனை செய்யப்படும். ஆனால் மத்திய அரசின் திடீர் உத்தரவால் மாடுகளின் வரத்து குறைந்து விட்டது. எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் தமிழக அரசு உரிய தீர்வு காண வேண்டும்’ என்றார்.

Tags:    

Similar News