மேலூரில் இன்று மஞ்சுவிரட்டு: காளை முட்டியதில் மாடுபிடி வீரர் பலி
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் யூனியன் அலுவலகம் எதிரே தனியார் இடத்தில் இன்று பா.ஜ.க. இளைஞர் அணி சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
மைதானத்தின் நடுவே காளை மாட்டை கயிற்றால் கட்டி விடுவார்கள். அதை 7 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் அடக்க வேண்டும்.
காளையை அடக்கும் வீரருக்கு பரிசு வழங்கப்படும். பிடிபடாத மாட்டுக்கு அதன் உரிமையாளருக்கு பரிசு வழங்கப்படும்.
மேலூர் மஞ்சுவிரட்டில் சருகுவலையப்பட்டியை சேர்ந்த அய்யனார் (வயது 27) என்பவர் ஒரு குழுவில் பங்கேற்று காளையை அடக்க முயன்றார்.
எதிர்பாராத விதமாக அய்யனாரின் கழுத்தில் காளை முட்டித்தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அய்யனார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.