search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Melur"

    மேலூர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    மேலூர்:

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 20 பேர் கொல்லிமலைக்கு வேனில் சுற்றுலா சென்றனர். இன்று அதிகாலை அவர்கள் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டனர். வேனை சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூரை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் ஓட்டி வந்தார்.

    இன்று காலை 9 மணியளவில் வேன் மேலூர் 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டயர் வெடித்ததால் வேன் தாறுமாறாக ஓடி ரோட்டில் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. வேனில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர்.

    உடனே அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேனில் சிக்கியவர்களை மீட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, தனிப்பிரிவு ஏட்டு சுரேஷ் மற்றும் போலீசாரும், டோல்கேட் விபத்து வாகன மீட்பு பிரிவு அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினரும் விரைந்து வந்து விபத்தில் காயமடைந்த பெண்கள் உள்பட 15 பேரை மேலூர், சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலூர் அருகே சட்ட விரோதமாக மணல் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் உள்ள கண்மாய் மற்றும் குளங்கள், வைகை ஆற்றுப் பகுதிகளில் இரவு நேரங்களில் சட்ட விரோதமாக மணல் திருடப்பட்டு வருகிறது. இதை தடுக்க அதிகாரிகளும், போலீசாரும் நடவடிக்கை எடுத்தும் எந்த பலனும் இல்லை.

    இந்த நிலையில் மேலூர் அருகே தும்பைப்பட்டியை அடுத்துள்ள சலாக்கிபட்டி, வேடார்குளம் கண்மாயில் அடிக்கடி சட்ட விரோதமாக மணல் திருடி கடத்தப்படுவதாக போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் புகார்கள் வந்தன.

    இதையடுத்து மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேசு மற்றும் போலீசார் அந்தப்பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது கண்மாயில் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த கும்பல், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்ப முயன்றது. ஆனால் போலீசார் விரைந்து செயல்பட்டு மணல் திருட்டு கும்பலை பிடித்தனர்.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் மணல் திருட்டில் ஈடுபட்டது மேலூர் சூரக்குண்டுவைச் சேர்ந்த கதிரேசன் (28), சிங்கம்புணரி பிரபாகரன் (31), மேலூர் முகமதியாபுரத்தைச் சேர்ந்த அப்துல் சலாம் (56),கரையான்பட்டி ரவிச்சந்திரன் (53) என தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 லாரிகள், ஒரு ஜே.சி.பி. எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலூர் அருகே பஸ் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த கல்லூரி மாணவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    மேலூர்:

    மேலூர் அருகே உள்ள ஆட்டுக்குளத்தில் தனியார் தொழிற்பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு மேலூர் மில்கேட்டைச் சேர்ந்த தர்மா (வயது 18), கருங்காலக்குடியைச் சேர்ந்த தினசூர்யா (19), அசோக் (18) ஆகியோர் படித்து வருகின்றனர்.

    நண்பர்களான இவர்கள் 3 பேரும் இன்று மதியம் சாப்பிடுவதற்காக கல்லூரியில் இருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டனர்.

    மேலூர்-சிவகங்கை ரோட்டில் உள்ள மலம்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பள்ளியைச் சேர்ந்த பஸ், மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த தர்மா சம்பவ இடத்திலேயே பலியானார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தினசூர்யா, அசோக் ஆகியோரை அந்தப்பகுதியினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து மேலூர் டி.எஸ்.பி. சுபாஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலூர் அருகே போர்வை வியாபாரி போல் நடித்து கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

    மேலூர்:

    தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் வீதி வீதியாகச் சென்று போர்வைகள் விற்று வருகின்றனர். வட மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்த போர்வைகள் குளிரை தாங்கும் என அவர்கள் கூறுவதை நம்பி ஏராளமானோர் வாங்கி வருகின்றனர்.

    போர்வை வியாபாரத்தை பயன்படுத்தி போதைப் பொருளான கஞ்சாவை சிலர் விற்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்தன.

    இந்த நிலையில் மேலூர் சத்தியபுரம் 4 வழிச்சாலை பகுதியில் போலீஸ்காரர்கள் கோபால் மற்றும் முத்து ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக போர்வைகளுடன் நின்றவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் மேலூர் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது.

    மேலும் அவர் வைத்திருந்த போர்வைகளை சோதனை செய்தபோது அதற்குள் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போர்வைக்குள் இருந்த 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதனை கொண்டு வந்தவரையும் கைது செய்தனர்.

    விசாரணையில், அவரது பெயர் பாண்டி (வயது 50) என்பதும், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கீரிப்பட்டியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    இவர் ஒரிசாவிற்கு சென்று போர்வை வாங்குவது போல் வாங்கிவந்து அதனுடன் கஞ்சாவையும் விற்று வந்துள்ளார். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலூர் அருகே வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பதினெட்டாங்குடி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் யோகா (வயது 29).

    இவருக்கும் மேலூர் தெற்குத்தெருவைச் சேர்ந்த அருண் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 22 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. ஆனாலும் அருண் மற்றும் குடும்பத்தினர் யோகாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த யோகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமணமான 2 ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலூர் அருகே வழக்கை வாபஸ் வாங்க மறுத்த ஆட்டோ டிரைவரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள நாவினிபட்டியைச் சேர்ந்தவர் திருவாசகம் (42). அதே பகுதியைச் சேர்ந்தவர் பாலசுந்தர். 2 பேரும் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார்கள்.

    தொழில் போட்டி காரணமாக இருவருக்கும் இடையே முன் விரோதம் உள்ளது. இது தொடர்பாக வழக்கு மேலூர் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

    இந்த நிலையில் வழக்கை வாபஸ் பெறுமாறு திருவாசகத்தின் மனைவியிடம் பாலசுந்தர் மற்றும் சிலர் மிரட்டினர்.

    இந்த நிலையில் நேற்று நாவினிப்பட்டியில் இது குறித்து திருவாசகம் பாலசுந்தரிடம் தட்டிக் கேட்டார். இதனால் தகராறு ஏற்பட்டது. பாலசுந்தர் மற்றும் குருநாதன், பாண்டிச்செல்வம் ஆகிய 3 பேரும் திருவாசகத்தை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டனர்.

    தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயப்பட்ட திருவாசகம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜேசு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    மேலூர் அருகே வீடு புகுந்து நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மேலூர்:

    மேலூர் அருகே உள்ள வெள்ளலூரைச் சேர்ந்தவர் கணேசன். (வயது 38). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    ஜெயந்தி தனது குழந்தைகளுடன் புலிமலைப்பட்டி கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டார்.

    இதை அறிந்த மர்ம மனிதர்கள் ஜெயந்தி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோவை திறந்தனர். அதிலிருந்த 5 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

    இன்று காலை வீடு திரும்பிய ஜெயந்தி வீட்டில் நகை-பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கொள்ளை குறித்து கீழவளவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சங்கீதா, ஏட்டு பரசுராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    மேலூர் அருகே இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 27). இவர் இன்று அதிகாலை 3 மணி யளவில் தனது நண்பர் ராஜா (20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மேலூரில் நடக்கும் விசே‌ஷ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றனர்.

    மேலூர் அருகே உள்ள கொட்டக்குடி விலக்கு பாலத்தில் சென்று கொண்டு இருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. 2 பேரும் நடு ரோட்டில் விழுந்தனர்.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செல்வம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். உயிருக்கு போராடிக்கு கொண்டிருந்த ராஜாவை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலூர் அருகே கணவருடன் சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் 7½ பவுன் நகையை பறித்து சென்றனர்.

    மதுரை:

    மேலூர் அருகே உள்ள புதுசுக்காம்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மனைவி பிரேமா (வயது40). நேற்று கணவன் -மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டனர்.

    மேலூர் சாலையில் ஒரு பள்ளி அருகே சென்றபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் பிரேமா கழுத்தில் கிடந்த 7½ பவுன் நகையை பறித்து கொண்டு சென்றனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மலைச்சாமி மோட்டார் சைக்கிளில் அவர்களை விரட்டினார். ஆனால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மலைச்சாமி, பிரேமா படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் மேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதிப்பெண் குறைந்ததால் மாயமான பிளஸ்-2 மாணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள எம்.மலம்பட்டியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகன் சியாம்சுந்தர் (வயது18).

    இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார். நேற்று தேர்வு முடிவுகள் வெளி வந்த நிலையில் தனது அத்தை கயல்விழி வீட்டுக்கு சென்று வருவதாக சியாம் சுந்தர் கூறி விட்டு சென்றார்.

    பின்னர் தேர்வு முடிவுகளை பார்த்த சியாம்சுந்தர் அதில் மதிப்பெண்கள் குறைந்ததால் மனவேதனை அடைந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் அவர் திடீரென மாயமாகிவிட்டார். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் சியாம்சுந்தரை காணவில்லை.

    இது குறித்து மேலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவரை தேடி வருகிறார்கள்.

    மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. சாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு டி.டி.வி. தினகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். #Rsamy #RIP
    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. சாமி. புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நோய் பாதிப்பு அதிகமாகவே சிகிச்சை பலனின்றி காலமானார்.

    இதையடுத்து அவரது உடல் மேலூரில் உள்ள வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மனைவி, மகளுடன் நேரில் சென்று சாமி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    அதைத்தொடர்ந்து மேலூர் பகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிர முகர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் திரளாக வந்து சாமி எம்.எல்.ஏ. உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


    இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது. அதன் பின்னர் மேலூர் மில்கேட் அருகே உள்ள கூலூத்துப்பட்டியில் உள்ள சுடுகாட்டில் சாமியின் உடல் தகனம் செய்யப்படுகிறது.

    மறைந்த சாமி மேலூர் தொகுதியில் 2001, 2006, 2011 ஆண்டுகளில் நடந்த தேர்தலில் 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவர். ஜெயலலிதா மறைவுக்கு பின் தினகரன் அணியில் இணைந்து அமைப்பு செயலாளராக பணியாற்றி வந்தார். #Rsamy #RIP
    மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சாமியின் உடல்நிலை இன்று காலை மோசமானது.
    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சாமி கடந்த சில மாதங்களாக உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    கடந்த வாரம் பாதிப்பு அதிகமாகவே மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 4 நாட்களாக இயல்பு நிலையில் இருந்த சாமியின் உடல்நிலை இன்று காலை மோசமானது.

    உடனே அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் இன்று மதியம் வரை அவர் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    அ.தி.மு.க.வின் தீவிர தொண்டரான மேலூர் சாமி, மேலூர் நகராட்சியில் கவுன்சிலராக இருந்து பின்னர் அ.தி.மு.க. நகரச் செயலாளராக பணியாற்றியவர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான இவர், மேலூர் தொகுதியில் 3 முறை அடுத்தடுத்து போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜெயலலிதா மறைவிற்கு பின் தற்போது சாமி தினகரன் அணியில் அமைப்பு செயலாளராக உள்ளார். #Tamilnews
    ×