செய்திகள்

மார்த்தாண்டம் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி சிறைவைத்து கற்பழிப்பு: கட்டிட தொழிலாளி கைது

Published On 2016-10-28 11:51 GMT   |   Update On 2016-10-28 11:51 GMT
பிளஸ்-2 மாணவியை கடத்தி சிறைவைத்து கற்பழித்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

நாகர்கோவில்:

மார்த்தாண்டம் அருகே உள்ள குழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் சுந்தர் சிங் (வயது 32). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற அந்த மாணவியை அவர் மோட்டார்சைக்கிளில் ஏற்றிக் கொண்டு கன்னியாகுமரிக்கு சென்றார். அங்கு லாட்ஜில் அறை எடுத்து அந்த மாணவியை கற்பழித்தார். பின்னர் நாகர்கோவில் பஸ் நிலையத்தில் மாணவியை இறக்கி விட்டு விட்டு சுபாஷ் சுந்தர் சிங் தப்பிச் சென்றார்.

மாணவியை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மாணவியை தேடினர். அப்போது அவர் நாகர்கோவில் பஸ்நிலையத்தில் தவிப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது சுபாஷ் சுந்தர் சிங் தன்னை கடத்திச் சென்று கற்பழித்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து மாணவியை அவரது பெற்றோர் குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று புகார் கொடுத்தனர். புகாரில் மாணவி கூறியதாவது:-

நான் பள்ளியாடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறேன். பள்ளிக்கு செல்லும்போதும், வரும்போதும் சுபாஷ் சுந்தர்சிங் வழிமறித்து என்னிடம் காதல் வசனம் பேசினார். கடந்த 18-ந் தேதி காலை பள்ளிக்கு புறப்பட்டுச் சென்ற என்னை அவர் வழிமறித்தார். உன்னை திருமணம் செய்து கொள்கிறேன், என்னுடன் வா என்று அழைத்தார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். உடனே கட்டாயப்படுத்தி என்னை அவரது மோட்டார்சைக்கிளில் ஏற்றிக் கொண்டு கன்னியாகுமரிக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள ஒரு லாட்ஜ் அறையில் அடைத்து என்னை பலவந்தமாக கற்பழித்தார். பின்னர் மாலையில் எனது வீட்டருகே கொண்டு போய் விட்டு விட்டார்.

இதேபோல 26-ந் தேதி காலையும் கன்னியாகுமரிக்கு அழைத்துச் சென்று லாட்ஜில் அடைத்து பல முறை கற்பழித்தார். அதன்பின் நாகர்கோவில் பஸ்நிலையத்தில் இறக்கி விட்டு அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். எனது பெற்றோர் தகவல் அறிந்து என்னை மீட்டுச் சென்றனர். என்னை மிரட்டி கற்பழித்த சுபாஷ் சுந்தர் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் புகாரில் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக குழித்துறை சப்-இன்ஸ்பெக்டர் மெர்சி ரமணி பாய் வழக்குப்பதிவு செய்து சுபாஷ் சுந்தர் சிங்கை கைது செய்தார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

Similar News