செய்திகள்

அம்பேத்கர் பற்றி கருத்து: ஹர்திக் பாண்ட்யா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

Published On 2018-03-22 02:46 GMT   |   Update On 2018-03-22 02:46 GMT
அம்பேத்கர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #HardikPandya
ஜோத்பூர்:

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஹர்திக் பாண்ட்யா,  ஆல்ரவுண்டரான இவர் கடந்த டிசம்பர் மாதம் தனது டுவிட்டர் பக்கத்தில் சட்ட மேதை அம்பேத்கரை விமர்சனம் செய்து கருத்து ஒன்றை வெளியிட்டு இருந்தார். இட ஒதுக்கீடு வழங்கியது குறித்து ஹர்திக் பாண்ட்யா அம்பேத்கரை விமர்சிக்கும் வகையில் பதிவிட்டு இருந்தார்.

ஹர்திக் பாண்ட்யாவின் இந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, ஹர்திக் பாண்ட்யா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜோத்பூரில் உள்ள நீதிமன்றத்தில், டி.ஆர் மேவால் என்பவர், மனு ஒன்றை தாக்கல் செய்தார். தனது மனுவில், அம்பேத்கரை இழிவு படுத்தும் வகையிலும் அரசியல் அமைப்பை அவமதிக்கும் வகையிலும் ஹர்திக்பாண்ட்யாவின் கருத்து உள்ளது. மேலும், குறிப்பிட்ட இனத்தவர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் உள்ளது. எனவே பாண்ட்யா மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று தனது மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம், ஹர்திக் பாண்ட்யா மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டது. இதனால், ஹர்திக் பாண்ட்யாவுக்கு இந்த விவகாரம் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
Tags:    

Similar News