செய்திகள்

உலக பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி

Published On 2017-08-22 04:19 GMT   |   Update On 2017-08-22 04:19 GMT
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.
கிளாஸ்கோ:

23-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நேற்று தொடங்கியது. 27-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து 21 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-13, 21-12 என்ற நேர்செட்டில் ரஷியாவின் செர்ஜி சிரான்டை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த வெற்றியை பெற ஸ்ரீகாந்துக்கு 29 நிமிடமே தேவைப்பட்டது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் உலக போட்டியில் இரண்டு முறை வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து களம் காணுகிறார். இந்த போட்டி குறித்து பி.வி.சிந்து அளித்த பேட்டியில், ‘நான் நிச்சயம் பதக்கம் வெல்ல வேண்டும் என்று எண்ணுகிறேன். இந்த போட்டியில் இரண்டு முறை வெண்கலப்பதக்கம் வென்று இருக்கிறேன். இந்த முறை வெண்கலத்தை விட சிறந்த பதக்கம் வெல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக களத்தில் கடுமையாக போராடுவேன்’ என்று தெரிவித்தார். 
Tags:    

Similar News