செய்திகள்

பாரா தடகள சாம்பியன்ஷிப்: வட்டு எறிதலில் இந்தியாவுக்கு மூன்றாவது பதக்கம்

Published On 2017-07-22 06:08 GMT   |   Update On 2017-07-22 06:22 GMT
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பின் பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் கரண்ஜோதி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

லண்டன்:

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை கரம்ஜோதி தலால் 19.02 மீட்டர் தூரம் எறிந்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார். லடிவியாவின் டயானா (23.18 மீ), கொலம்பியாவின் எரிக்கா மரிக் (21.30 மீ) ஆகியோர் முதல் இரண்டு இடத்தை பிடித்தனர்.

கரம்ஜோதி தலால், உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ளார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 4-வது இடத்தை பிடித்திருந்தார்.

இது இந்தாண்டு நடைபெற்றுவரும் சர்வதேச பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா வெல்லும் மூன்றாவது பதக்கமாகும். ஏற்கனவே ஆண்களுக்கான உருளை தடி (கிளப் த்ரோ) எறிதலில் அமித்குமார் சரோஹா வெள்ளிப்பதக்கமும், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் சுந்தர் சிங் தங்கப்பதக்கமும் வென்றுள்ளனர்.

இதன்மூலம் பதக்கப்பட்டியலில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கங்கள் வென்றுள்ள இந்தியா 30-வது இடத்தில் உள்ளது. 54 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்திலும், 42 பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
Tags:    

Similar News