இந்தியா

டெல்லியில் உள்ள அருங்காட்சியகத்தின் பெயர் மாற்றம்: நேருவின் பாரம்பரியத்தை மத்திய அரசு அழிக்கிறது- காங்கிரஸ் கண்டனம்

Published On 2023-08-16 08:38 GMT   |   Update On 2023-08-16 09:42 GMT
  • நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது.
  • பெயர் மாற்றம் என்பது உண்மையில் அற்பத்தனம் மற்றும் கோபத்திற்காக செய்யப்பட்டிருக்கிறது.

புதுடெல்லி:

டெல்லியில் தீன்மூர்த்தி பவன் வளாகத்தில் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் உள்ளது.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு, தீன்மூர்த்தி பவனில் தங்கியிருந்தார். அவர் மறைந்த பிறகு அங்கு நூலகமும், விடுதலை போராட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சியில் நேருவின் பங்களிப்பு குறித்து அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டு நினைவு சின்னமாக மாற்றப்பட்டது.

இதற்கிடையே நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி கடந்த மாதம் நடந்த அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் சிறப்பு கூட்டத்தில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என பெயர் மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயர், பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என பெயர் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில் நேரு அருங்காட்சியகத்தின் பெயரை மாற்றியதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் கூறியதாவது:-

நேருவையும், அவரது பாரம்பரியத்தையும் மறுப்பது, சிதைப்பது, அவதூறு செய்வது, அழிப்பது என்ற ஒற்றை புள்ளி நிகழ்ச்சி நிரலை மோடி கொண்டிருக்கிறார்.

பெயர் மாற்றம் என்பது உண்மையில் அற்பத்தனம் மற்றும் கோபத்திற்காக செய்யப்பட்டிருக்கிறது. நேரு பாரம்பரியத்தை மோடி அரசு அழித்து வருகிறது. இதுவே அவரது அரசின் செயல் திட்டம் ஆகும்.

சுதந்திர போராட்டத்தில் நேருவின் மாபெரும் பங்களிப்புகள், இந்திய தேசிய அரசின் ஜனநாயக, மதச்சார் பற்ற அரசியல், தாராளவாத அடித்தளங்களை கட்டியெ ழுப்புவதில் அவர் செய்த மகத்தான சாதனைகள் தற்போது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இடைவிடாத தாக்குதல் இருந்த போதிலும் நேருவின் பாரம்பரியம், உலகம் காணும் வகையில் வாழும். அவர் வரும் தலைமுறைகளுக்கும் ஊக்கமளிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News