இந்தியா
சோனியா காந்தி

உதய்பூர் சிந்தனையாளர் மாநாடு கட்சியின் எழுச்சிக்கு வித்திடுவதாக அமையவேண்டும் - சோனியா காந்தி

Published On 2022-05-09 22:51 GMT   |   Update On 2022-05-09 22:51 GMT
ராஜஸ்தானில் நடைபெற உள்ள சிந்தனையாளர் மாநாடு வெறும் சடங்கு, சம்பிரதாய கூட்டமாக நடக்கக் கூடாது என காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.
புதுடெல்லி:

ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ்  ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள உதய்பூரில் வரும் 13 முதல் 15-ம் தேதி வரை சிந்தனையாளர் மாநாடு நடக்க உள்ளது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 400-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், நடப்பு ஆண்டில் குஜராத்தில் சட்டசபை தேர்தல் உள்பட அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வழிகளை பற்றி ஆலோசனை மேற்கொள்ள தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றுது. அதில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:

நம் வாழ்க்கையின் அங்கமாக கட்சி உள்ளது. அனைவரும் கட்சிக்கு முழு விசுவாசமாக இருக்க வேண்டும். நாம் வீறு கொண்டு முன்னேறி கட்சிக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நம்முன் உள்ள சவால்களை சமாளிக்க வேண்டும். இதற்குத்தான் சிந்தனையாளர் மாநாடு நடத்தப்படுகிறது. இது வெறும் சடங்கு, சம்பிரதாய கூட்டமாக நடக்கக் கூடாது என தெரிவித்தார்.

Tags:    

Similar News