இந்தியா
விக்னேஷ்

விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கு: கைதான 6 காவலர்களுக்கும் நீதிமன்ற காவல்

Published On 2022-05-07 16:27 GMT   |   Update On 2022-05-07 16:27 GMT
விக்னேஷ் மரணம் விவகாரத்தில் சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
சென்னையில் போலீஸ் கஸ்டடியில் இருந்த விசாரணைக் கைதி விக்னேஷ் மரணம் அடைந்தார். அவரது உடலில் காயங்கள்  இருப்பதாகவும், போலீசார் அடித்து துன்புறுத்தியதன் காரணமாகவே விக்னேஷ் உயிரிழந்தார் என்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

விக்னேஷின் மரணத்துக்கு அரசியல் கட்சியினரும் நீதி கேட்டனர். குறிப்பாக, இந்தப் பிரச்சினையை அ.தி.மு.க. சட்டசபையிலும் எழுப்பியது. அதன்பின் விக்னேசின் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியையும் அளித்து உத்தரவிட்டது.

சட்டசபையில் இந்த விவகாரம் எதிரொலித்தது. நேர்மையான முறையில் விசாரணை நடைபெற வேண்டுமானால் இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கு பற்றி விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விக்னேஷ் மரணம் விவகாரத்தில் சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. பிரேத பரிசோதனை அடிப்படையில் கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது என தெரிவித்தார்.

விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் காவலர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், மேலும் 4 காவலர்களையும் கைது செய்தனர்.

இந்நிலையில், விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கில் கைதான 6 காவலர்களுக்கும் வரும் 20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நீர்மின் நிலையத்தில் விபத்து- இருவர் பலி
Tags:    

Similar News