இந்தியா
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கேபிள் கார்கள் மோதி விபத்து- 2 பேர் உயிரிழப்பு
இரண்டு விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ள திரிகுட் மலை பகுதியை கடக்க உதவும் கேபிள் கார்கள் நேற்று ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்தை சந்தித்தன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது.
பாபா பைத்யநாத் கோயில் அருகே 1200 அடி உயர மலைப்பகுதியில் இந்த விபத்து நடந்த நிலையில், மீட்பு பணியில் தேசிய பேரீடர் மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். விமானபடை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
அந்த கேபிள் கார்களில் மொத்தம் 48 பேர் பயணம் செய்திருந்த நிலையில் 30 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 18 பேரை மீட்கும் பணி நடைபெறுவதாக ஜார்க்கண்ட் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹபிசுல் ஹசன் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். மீட்கப்பட்டவர்கள் படுகாயம் அடைந்த 18 பேர் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
தனியார் கேபிள் கார் நிறுவன மேலாளரும் மற்ற ஊழியர்களும் விபத்திற்கு பிறகு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.