இந்தியா
மக்களவையில் நிர்மலா சீதாராமன் (கோப்பு படம்)

வங்கிகளில் கடன் பெற்று ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- மத்திய நிதி மந்திரி விளக்கம்

Published On 2022-03-28 09:06 GMT   |   Update On 2022-03-28 15:21 GMT
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கடனை திருப்பி செலுத்தாதவர்களிடம் இருந்து பணம் திரும்ப பெறப்படவில்லை என்றும் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் இன்று வங்கிகளின் கடனை திருப்பிச் செலுத்தாதவர்கள் மற்றும் அவர்களது செயல்படாத சொத்துகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து திமுக எம்.பி. டி ஆர் பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். 

அப்போது அவர் பேசியதாவது: 

மோடி தலைமையிலான அரசு முதன்முறையாக  வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்களிடம் இருந்து பணத்தை வசூலித்துள்ளது. 

கடன் பெற்று ஏமாற்றியவர்கள் மீது எப்ஐஆர் பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

திரும்ப வராத  கடன்களை தள்ளுபடி செய்வது என்பது முழுமையான தள்ளுபடி என்று அர்த்தமல்ல. வங்கிகள் ஒவ்வொரு கடன்கள் மீதும் நிலுவைத் தொகையை வசூலித்து வருகின்றன. 

பொதுத்துறை வங்கிகள் கடனை செலுத்தாதவர்களிடமிருந்து இருந்து சொத்துக்களை கையகப்படுத்தி உள்ளன. 

முந்தைய ஐக்கிய முற்போக்கு ஆட்சியின் போது அரசியல் காரணங்களுக்காக கடன்கள் வழங்கப்பட்டன. ஆனால் அந்த கடனை திரும்பி செலுத்தாத வர்களிடம் இருந்து எந்த பணமும் மீட்கப்படவில்லை. கசப்பான இந்த உண்மையை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். 

செயலி அடிப்படையிலான நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை இந்திய ரிசர்வ் வங்கியும் கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News