இந்தியா
ஒரே தொலைபேசி எண்ணில் 6 நபர்கள் முன்பதிவு செய்யலாம் - கோவின் இணையதளத்தில் புதிய வசதி
கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கோவின் இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கோவின் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர்களின் பெயர், தொலைபேசி எண் ஆகியவை கோவின் இணையதளத்தில் பதிவு செய்யப்படும். தடுப்பூசி செலுத்திய பின் அதற்கான சான்றிதழ் சம்பந்தப்பட்ட நபருக்கு தொலைபேசி எண் மூலமாக குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்படும். அதை வைத்துச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதில் ஒரே தொலைபேசி எண்ணை பயன்படுத்தி 4 பேர் முன்பதிவு செய்யும் வகையில் கோவின் இணையதளம் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே, தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தியதாக சான்றிதழ் வந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், கோவின் இணையதளத்தில் இனி 6 நபர்கள் ஒரே தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோவின் இணையதளத்தில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் பயனாளர்கள் தங்களது தடுப்பூசி டோஸ் விவரங்களை மாற்றியமைக்க முடியும். 3 முதல் 7 நாட்களுக்குள் அவர்களது விவரங்கள் சரிசெய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்...தமிழகத்தில் மேலும் 29,870 பேருக்கு கொரோனா பாதிப்பு