இந்தியா
பிரதமர் மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால் கூட ஏற்க முடியவில்லை- ராகுல் காந்தி கிண்டல் ட்வீட்
பிரதமர் மோடியுடன் யாரோ பேசியதால் தான், அவர் தனது உரையை நிறுத்தினார் என பா.ஜ.கவினர் தெரிவித்து வருகின்றனர்.
புது டெல்லி:
ஐரோப்பிய நாடான ஸ்விட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்.
இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும் காணொளி மூலம் உரையாற்றினார். பிரதமர் மோடி பேசிக் கொண்டிருந்த, டெலிபிராம்ப்டர் இயந்திரம் தொழில்நுட்ப கோளாறால் நின்றது. இதன் காரணமாக மோடி சில நிமிடங்கள் பேசாமல் அப்படியே நின்றார். இந்த வீடியோவை பகிர்ந்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலர் கிண்டலடித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 'பிரதமர் மோடி கூறும் பொய்களை டெலிப்ராம்ப்டரால்கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரதமர் மோடியால் சொந்தமாகப் பேச முடியாது' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் வார்த்தைக்கு பா.ஜ.கவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியிடம் யாரோ ஒருவர் பேசியதால்தான், அவர் தனது உரையை நிறுத்தியிருக்கிறார். டெலிபிராம்ப்டர் பிரச்னை அல்ல என பா.ஜ.கவினர் ட்விட்டரில் கூறி வருகின்றனர்.
What just happened here?? pic.twitter.com/fqyVDBL9ir
— Srinivas BV (@srinivasiyc) January 17, 2022
டெலிபிராம்ப்டர்கள் இயந்திரங்கள் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டெலிபிராம்ப்டர் இயந்திரத்தை நின்றபடி பார்த்தும், அமர்ந்தும் பேச முடியும். பார்வையாளர்களுக்கு பேச்சாளர்கள் தங்களை பார்த்துப் பேசுவது போல தோன்றும். இந்த இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் மோடியால் சொந்தமாக பேச முடியவில்லை என எதிர்க்கட்சிகள் கிண்டலடித்து வருகின்றனர்.