இந்தியா
கூட்டத்தில் சரத்பவார் பேசிய காட்சி.

போக்குவரத்து கழக ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: சரத்பவார்

Published On 2022-01-11 02:06 GMT   |   Update On 2022-01-11 02:06 GMT
போக்குவரத்து கழகத்தை, மாநில அரசுடன் இணைக்க வலியுறுத்தி கடந்த அக்டோபர் 28-ந் தேதி முதல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மும்பை :

மராட்டிய மாநில போக்குவரத்து கழகம் நாட்டிலேயே பெரிய கழங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் 93 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். போக்குவரத்து கழகம் சார்பில் தினந்தோறும் 16 ஆயிரம் பஸ் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் போக்குவரத்து கழகத்தை, மாநில அரசுடன் இணைக்க வலியுறுத்தி கடந்த அக்டோபர் 28-ந் தேதி முதல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது ஓரளவு ஊழியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர். எனினும் 50 ஆயிரம் ஊழியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் போக்குவரத்து துறை மந்திாி அனில் பரப், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தொழிலாளர்கள் சங்க செயல் கமிட்டியினருடன் நேற்று ஷயாத்ரி விருந்தினர் மாளிகையில் பேசினர். அப்போது மாநில போக்குவரத்து கழக ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என சரத்பவார் வலியுறுத்தினார்.

மேலும் அவர் கூட்டத்தில் பேசுகையில், "கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் காரணமாக மாநில போக்குவரத்து கழகம் கடும் நிதி இழப்பை சந்தித்து உள்ளது. மாநில போக்குவரத்து கழகத்தின் எதிர்காலம் கருதியும், லட்சக்கணக்கான மக்கள் அவதிப்படுவதை தவிர்க்கவும் பஸ் ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். " என்றார்.

இதேபோல பணிக்கு திரும்பும் 50 ஆயிரம் ஊழியர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என மந்திாி அனில்பரப் உறுதி அளித்தார். மேலும் ஏற்கனவே பணி நீக்கம், இடை நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை திரும்ப பெறுவது குறித்தும் அரசு பரிசீலித்து வருவதாக மந்திரி கூறினார்.

இதேபோல வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும், சம்பளத்தை உயர்த்த வேண்டும் என ஊழியர்கள் சங்க தலைவர்கள் கூறினர். இதையடுத்து 2 மாதங்களாக நடந்து வரும் போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News