இந்தியா
ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு 366 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் -மத்திய அரசு தகவல்
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, காஷ்மீரி பண்டிட்டுகள் அல்லது இந்துக்கள் யாரும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து இடம்பெயரவில்லை என பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், இதுவரை 96 பொதுமக்களும், 366 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. பாதுகாப்பு படை தரப்பில் 81 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து பாராளுமன்ற மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இவ்வாறு குறிப்பிட்டார்.
‘ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, காஷ்மீரி பண்டிட்டுகள் அல்லது இந்துக்கள் யாரும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து இடம்பெயரவில்லை. இருப்பினும், சமீபத்தில் காஷ்மீரில் வசிக்கும் சில காஷ்மீரி பண்டிட் குடும்பங்கள், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள், ஜம்மு பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்தக் குடும்பங்கள் அனைத்தும் அரசு பணியாளர்களின் குடும்பங்கள். அவர்களில் பலர், கல்வி நிறுவனங்களில் குளிர்கால விடுமுறையின் ஒரு பகுதியாக குளிர்காலத்தில் ஜம்முவுக்குச் செல்கிறார்கள்’ என்றார் நித்யானந்த ராய்.