செய்திகள்
கைது

மகளை கொடுமை படுத்திய மருமகனை கொலை செய்த மூதாட்டி கைது

Published On 2021-11-20 04:23 GMT   |   Update On 2021-11-20 04:23 GMT
வடலாவில் மகளை கொடுமை படுத்திய மருமகனை சுத்தியலால் தாக்கி கொலை செய்த பஞ்சாப்பை சேர்ந்த மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
மும்பை:

மும்பை வடலாவை சேர்ந்த மூதாட்டி சாந்தி பால்(வயது70). பஞ்சாப்பை சேர்ந்த இவர், தனது மகளுடன் கடந்த 30 ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த பிமால்கன்னா(57) என்பவருடன் தங்கி வந்தார். அப்போது பிமால்கன்னா மூதாட்டி சாந்தி பாலின் மகள் மீது காதல் வயப்பட்டார். பின்னர் மூதாட்டியின் மகளை திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் பிமால்கன்னா மனைவியை கொடுமைபடுத்தியதாக தெரிகிறது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

இதனால் மகள் படும் துயரத்தை தாங்க முடியாமல் மூதாட்டி சாந்தி பால், பிமால்கன்னா மீது ஆத்திரம் அடைந்தார். கடந்த 16-ந்தேதி வீட்டிற்கு வந்த பிமால்கன்னாவிடம் இது தொடர்பாக வாக்குவாதம் செய்தார்.

இந்த வாக்குவாதம் முற்றியதில் கடும் ஆத்திரம் அடைந்த மூதாட்டி சாந்தி பால் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து பிமால் கன்னாவின் தலையில் பலமாக தாக்கினார். இதில், படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனால் பயந்துபோன மூதாட்டி சாந்தி பால் அவரை மீட்டு சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டரிடம் தவறி கீழே விழுந்து காயம் அடைந்ததாக கூறினார்.

இதைத்தொடர்ந்து டாக்டர் அவருக்கு நடத்திய சிகிச்சையில் அவர் சுத்தியலால் தாக்கப்பட்டது தெரியவந்தது. இதற்கிடையே பிமால் கன்னா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது பற்றி டாக்டர் வடலா டி.டி. போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து, மூதாட்டியை கைது செய்தனர்.
Tags:    

Similar News