செய்திகள்
2019 ஆகஸ்டுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்து வருகிறது - அமித்ஷா
ஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க விரும்புபவர்களை நாங்கள் கடுமையாக கையாள்வோம் என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்:
உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று ஜம்மு காஷ்மீர் சென்றார். காஷ்மீர் இளைஞர் சங்கத்தின் உறுப்பினர்கள் மத்தியில் அவர் பேசினார். ஸ்ரீநகரில் உள்ள அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது:
2004 முதல் 2014 வரை காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்கு 2,081 பேர் கொல்லப்பட்டனர். சராசரியாக ஆண்டுக்கு 208 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
2014 முதல் தற்போதுவரை ஆண்டுக்கு சராசரியாக 30 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். 2019, ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு பின்னர் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்து வருகிறது. பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசும் சம்பவம் மாயமாகியுள்ளது. நான் உங்களிடம் ஒன்றை உறுதியளிக்கிறேன். அதுஎன்னவென்றால் ஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க விரும்புபவர்களை நாங்கள் கடுமையாக கையாள்வோம்.
காஷ்மீர் இளைஞர்களை தேசிய நீரோட்டத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று அனைவரும் தொடர்ந்து சொல்கின்றனர். ஆனால், உங்களிடம் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். காஷ்மீர் நமது பிரதான நிலப்பரப்பு, காஷ்மீர் இந்தியாவின் இதயம். காஷ்மீர் அமைதி, வளம், வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியரின் விருப்பம் என குறிப்பிட்டார்.