செய்திகள்
மாநிலங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் 41.69 கோடி -மத்திய அரசு தகவல்
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2.74 கோடி தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை கூறி உள்ளது.
புதுடெல்லி:
கொரோனா தடுப்புப் பணிகளுக்கான தடுப்பூசிகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை வழங்கி வருகிறது. இதுவரையில், மத்திய சுகாதாரத் துறை 41.69 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை மாநிலங்களுக்காக வழங்கியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த தடுப்பூசி டோஸ்கள் 41,69,24,550. இதில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, வீணான மருந்துகள் உள்பட 38,94,87,442 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 2,74,37,108 டோஸ்கள் கையிருப்பில் உள்ளன என்று சுகாதாரத்துறை கூறி உள்ளது.
ஜூன் 21ம் தேதி புதிய தடுப்பூசி கொள்கை அமலுக்கு வந்தது. அதன்படி, 18 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. நாட்டில் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில், 75 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்து, அவற்றை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்... சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் 65 கோடி தடுப்பூசிகள் பெற மத்திய அரசு ஒப்பந்தம்