செய்திகள்
தயக்கத்தில் இருந்து விடுபட்டு தடுப்பூசி போடுங்கள்... பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
கொரோனா போய்விட்டது என்ற நினைப்பில் யாரும் இருக்க வேண்டாம், இது வடிவத்தை மாற்றிக்கொண்டே இருக்கும் ஒரு வகையான நோய் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி:
மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியின்போது, மத்திய பிரதேச மாநிலம், துலாரியா கிராம மக்களிடம் பிரதமர் மோடி பேசினார். அப்போது, கிராம மக்கள் அனைவரும் தயங்காமல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
தடுப்பூசி தொடர்பான தயக்கம் மற்றும் பயத்திலிருந்து விடுபட வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, இந்தியாவில் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்ட பல கிராமங்கள் உள்ளதை சுட்டிக்காட்டினார்.
“வதந்தி பரப்புபவர்கள் அதைப் பரப்பிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் நாம் நம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். கொரோனா போய்விட்டது என்ற நினைப்பில் யாரும் இருக்க வேண்டாம், இது வடிவத்தை மாற்றிக்கொண்டே இருக்கும் ஒரு வகையான நோய்.
தடுப்பூசிகளை உருவாக்கிய நமது விஞ்ஞானிகள் மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். தயவுசெய்து பயத்திலிருந்து விடுபடுங்கள். தடுப்பூசி போட்டுக்கொண்டால் சில நேரங்களில் மக்களுக்கு காய்ச்சல் வரக்கூடும், ஆனால் அது மிகவும் லேசானது. சில மணி நேரம் மட்டுமே நீடிக்கும். தடுப்பூசியைத் தவிர்ப்பது மிகவும் ஆபத்தானது. நீங்கள் உங்களை ஆபத்தில் தள்ளுவது மட்டுமல்லாமல், உங்கள் குடும்பம் மற்றும் முழு கிராமத்தையும் பாதிக்க வைக்கிறீர்கள்” என்றும் பிரதமர் கூறினார்.