செய்திகள்
பண மோசடி

பெங்களூருவில் நூதன முறையில் பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.12¼ லட்சம் அபேஸ்

Published On 2021-06-19 02:46 GMT   |   Update On 2021-06-19 02:46 GMT
பெங்களூருவில் நூதன முறையில் பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.12¼ லட்சம் திருடப்பட்டது. இதுகுறித்து வடகிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகின்றனர்.
பெங்களூரு :

பெங்களூரு நாகவாரா அருகே வீரண்ணா பாளையாவில் 49 வயது பெண் வசித்து வருகிறார். அந்த பெண்ணின் செல்போனுக்கு கடந்த 13-ந் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், உங்களது வங்கி கணக்குடன் உடனடியாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும், இல்லையெனில் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. உடனே குறுந்தகவல் வந்த செல்போன் எண்ணுக்கு அந்த பெண் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது வங்கி ஊழியர் பேசுவதாக கூறிய மர்மநபர், அந்த பெண்ணின் வங்கி கணக்கின் விவரங்களை கேட்டு அறிந்து கொண்டார். பின்னர் தான் ஒரு லிங்க் அனுப்புவதாகவும், அதில் உங்களது விவரங்களை கூறும்படியும் மர்மநபர் தெரிவித்தார்.

அந்த லிங்கில் தனது வங்கியின் விவரங்களை பெண் அனுப்பினார். அவ்வாறு அனுப்பிய சில நிமிடங்களில் பெண்ணின் வங்கி கணக்கில் இருந்த ரூ.12 லட்சத்து 29 ஆயிரம் குறிப்பிட்ட இடைவெளியில் எடுக்கப்பட்டது. உடனே அந்த நபரை, அப்பெண் செல்போனில் தொடர்பு கொண்டே போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அந்த மர்மநபரே வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்கும்படி கூறி ரூ.12.29 லட்சத்தை எடுத்துஅபேஸ் செய்தது தெரிந்தது. இதுகுறித்து வடகிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகின்றனர்.
Tags:    

Similar News