செய்திகள்
மில்கா சிங் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவிற்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா தொற்றால் மொகாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருந்ததால் குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த மாத தொடக்கத்தில் மில்கா சிங்குக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மில்கா சிங் நேற்று இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விளையாட்டு ஐகான் மில்கா சிங் மறைந்தார் என்ற செய்தி வருத்தம் அடைய செய்தது. அவரது போராட்டங்களின் கதை மற்றும் விளையாட்டில் அவரது பாத்திரத்தின் வலிமை தொடர்ந்து தலைமுறை இந்தியர்களுக்கு ஊக்கமளிக்கும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் எண்ணற்ற அபிமானிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.
இதேபோல், மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உங்கள் கடைசி விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றுவோம். இந்தியா தனது நட்சத்திரத்தை இழந்துவிட்டது. மில்கா சிங் ஜி எங்களை விட்டுப் பிரிந்தாலும்,ஒவ்வொரு இந்தியரும் பிரகாசிக்க அவர் தொடர்ந்து ஊக்கமளிப்பார் என குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மில்கா சிங் ஜியின் மறைவைக் கேட்டு வருத்தமடைந்தேன். இது ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. பறக்கும் சீக்கியரின் புராணக்கதை அடுத்த தலைமுறைகளுக்கு எதிரொலிக்கும் என தெரிவித்துள்ளார்.