செய்திகள்
டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்
மாநிலங்களுக்கு வழங்குவதற்காக மத்திய அரசு உடனடியாக வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை வாங்க வேண்டும் என கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுடெல்லி:
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
டெல்லியில் 18 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் நிறுத்தப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசி முழுவதும் பயன்படுத்தப்பட்டுவிட்டது. இதன் காரணமாக, அவர்களுக்கான தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளன. சில மையங்களில் குறைவான தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன. அவை இன்று போடப்படும்.
டெல்லிக்கு ஒவ்வொரு மாதமும் 80 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து தேவை. இந்த அளவு மருந்து கிடைத்தால் மூன்று மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியும். மாநிலங்களுக்கு வழங்குவதற்காக மத்திய அரசு உடனடியாக வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை வாங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.