செய்திகள்
கோப்புப்படம்

மாநிலங்களுக்கு மேலும் 57.70 லட்சம் தடுப்பூசிகள் - மத்திய அரசு 3 நாளில் வழங்குகிறது

Published On 2021-04-28 23:52 GMT   |   Update On 2021-04-28 23:52 GMT
கொரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்துவதற்காக உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜனவரி 16-ந்தேதி தொடங்கி செயல்படுத்தி வருகிறது.
புதுடெல்லி:

மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் 57.70 லட்சம் தடுப்பூசிகளை 3 நாளில் வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்துவதற்காக உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜனவரி 16-ந்தேதி தொடங்கி செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள மாநிலங்களுக்கும், யூனியன்பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரை 15 கோடியே 95 லட்சத்து 96 ஆயிரத்து 140 தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி உள்ளது.

இதை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது.



இவற்றில் மொத்தம் 14 கோடியே 89 லட்சத்து 76 ஆயிரத்து 248 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் வீணாய்ப்போன தடுப்பூசிகளும் அடஙகும்.

தற்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்வசம் 1 கோடியே 6 லட்சத்து 19 ஆயிரத்து 892 தடுப்பூசிகள் இருப்பு உள்ளன.

அடுத்த 3 நாளில் மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் 57 லட்சத்து 70 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்கும் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது. மராட்டியத்தை பொறுத்தமட்டில் மாநில அரசு அதிகாரிகள், தங்கள் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் முடிந்து விட்டன என கூறி இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இது மாநிலத்தில் தடுப்பூசி இயக்கத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி விடும் என மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.

மராட்டிய மாநிலத்துக்கு நேற்று காலை 8 மணி நிலவரப்படி இதுவரை 1 கோடியே 58 லட்சத்து 62 ஆயிரத்து 470 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 1 கோடியே 53 லட்சத்து 56 ஆயிரத்து 151 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 0.22 சதவீத தடுப்பூசிகள் வீணாகி உள்ளன. மீதி 5 லட்சத்து 6 ஆயிரத்து 319 தடுப்பூசிகள் மாநில அரசிடம் இருப்பு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அடுத்த 3 நாளில் அங்கு மேலும் 5 லட்சம் தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட உள்ளன.
Tags:    

Similar News