செய்திகள்
தடுப்பூசி போடும் பணி

புதிய உச்சம்... இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்தை தாண்டியது

Published On 2021-04-26 04:26 GMT   |   Update On 2021-04-26 04:26 GMT
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28 லட்சத்தை தாண்டி உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு, கடந்த 24 மணி நேரத்தில் 3,52,991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1,73,13,163 ஆக உயர்ந்துள்ளது.



நேற்று ஒரே நாளில் 2812 பேர் கொரோனா பாதிப்பினால் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,95,123 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,43,04,382 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2,19,272 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 28,13,658  பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 14,19,11,223 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News