செய்திகள்
திரவ ஆக்சிஜன் லாரிகள்

திரவ ஆக்சிஜனை மருத்துவம் சாராத பணிகளுக்கு பயன்படுத்த தடை - மத்திய அரசு உத்தரவு

Published On 2021-04-25 21:53 GMT   |   Update On 2021-04-25 21:53 GMT
திரவ ஆக்சிஜனை மருத்துவம் சாராத பணிகளுக்கு பயன்படுத்த தடை விதித்த மத்திய அரசு, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்குமாறு உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அவர்களுக்கான மருந்துகள், உபகரணங்கள், ஆக்சிஜன் போன்றவற்றுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, மருத்துவ ஆக்சிஜனுக்கான பற்றாக்குறையால் தலைநகர் டெல்லி உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் திணறி வருகின்றன. எனவே இந்தத் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில் உள்நாட்டில் உற்பத்தியை அதிகரித்தல், போக்குவரத்துக்கான வழிகளை எளிதாக்குதல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தல் என பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளது.

இந்நிலையில், திரவ ஆக்சிஜன் பயன்பாட்டில் கட்டுப்பாடுகளை நேற்று விதித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களில் அவர் கூறியிருப்பதாவது:-

எந்த ஒரு நிறுவனமும் மருத்துவம் சாராத பணிகளுக்கு திரவ ஆக்சிஜனை பயன்படுத்துவதற்கு மாநிலங்கள் அனுமதிக்கக் கூடாது. இதன்மூலம் மருத்துவ பணிகளுக்கு ஆக்சிஜன் வரத்து அதிகரிக்கும். ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் கையிருப்பில் இருக்கும் ஆக்சிஜனை மருத்துவ பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக அரசுக்கு வழங்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. அடுத்த உத்தரவு வரும் வரை இது செயல்பாட்டில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News