செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

ஒரு வார கால ஊரடங்கு- அலகாபாத் ஐகோர்ட்டின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத்தடை

Published On 2021-04-20 09:15 GMT   |   Update On 2021-04-20 09:15 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் 5 நகரங்களில் ஒரு வார கால ஊரடங்கினை அமல்படுத்துவது தொடர்பான, அலகாபாத் ஐகோர்ட்டின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத்தடை விதித்துள்ளது.
புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்துள்ளது.

இந்த சூழலில், மாநிலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, தனிமைப்படுத்தும் மையங்கள் தொடர்பான ஒரு பொதுநல மனுவை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது அவர்கள் அளித்த தீர்ப்பில், ‘தற்போதைய சூழலில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்வது ஒரு வாரம் தடுக்கப்பட்டால், கொரோனா சங்கிலி உடைக்கப்படும். அது, முன்களப் பணியாளர்களுக்கும், சுகாதாரப்பணியாளர்களுக்கும் கொஞ்சம் ஆசுவாசமும் அளிக்கும். எனவே, பிரயாக்ராஜ், லக்னோ, வாரணாசி, கான்பூர், கோரக்பூர் ஆகிய நகரங்களில் ஒரு வார கால ஊரடங்கை அரசு கண்டிப்பாக அமல்படுத்த நாங்கள் அறிவுறுத்துகிறோம்’ என்று தெரிவித்துள்ளனர்.



இதனைத்தொடர்ந்து 5 நகரங்களில் ஒரு வார கால ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பான அலகாபாத் ஐகோர்ட்டின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் உத்தரபிரதேச அரசு வழக்கு தொடர்ந்தது. மேலும் ஐகோர்ட்டின் உத்தரவு இருந்தபோதிலும் மாநிலத்தில் ஊரடங்கு விதிக்கப்பட மாட்டாது என்று உத்தரபிரதேச மாநில அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் 5 நகரங்களில் ஒரு வார கால ஊரடங்கினை அமல்படுத்துவது தொடர்பான, அலகாபாத் ஐகோர்ட்டின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத்தடை விதித்துள்ளது.

மேலும் சுப்ரீம்கோர்ட்டு பெஞ்ச் இன்று தனது உத்தரவில், உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பான அதன் உயர் நடவடிக்கைகள் மற்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News