செய்திகள்
தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா... மத்திய அமைச்சரவை நாளை ஆலோசனை
பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தெரிகிறது.
புதுடெல்லி:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,009 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 11,149,324 பேர் குணமாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 213 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் 11,645,719 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 160,003 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். அதேசமயம், கொரோனா பாதித்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,11,30,288 ஆக (95.96%) பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2-வது அமர்வு கடந்த மார்ச் 8-ம் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 8-ம் தேதி முடிவடைகிறது. கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள மசோதா குறித்தும், தயார் செய்யப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.