செய்திகள்
வங்கிகள் தனியார்மயத்துக்கு ராகுல்காந்தி எதிர்ப்பு
இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் வசம் ஒப்படைக்கும் அறிவிப்பை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
மத்திய அரசு நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் வசம் ஒப்படைக்கும் அறிவிப்பினை வெளியிட்ட நிலையில் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர்.
இதுகுறித்து மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வங்கி ஊழியர்கள் அறிவித்தபடி வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், வங்கிகள் தனியார்மயத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்களுக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். மத்திய அரசு, லாபத்தை தனியார்மயமாக்குகிறது. நஷ்டத்தை தேசியமயமாக்குகிறது. பொதுத்துறை வங்கிகளை மோடியின் நண்பர்களுக்கு விற்பதால் நாட்டின் நிதி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என பதிவிட்டுள்ளார்.