செய்திகள்
காங்கிரஸ் பேரணியில் பாகிஸ்தான் கொடி பயன்படுத்தப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்
காங்கிரஸ் பேரணியில் பாகிஸ்தான் கொடி பயன்படுத்தப்பட்டதாக வைரலாகும் புகைப்படம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
காங்கிரஸ் பேரணியில் பாகிஸ்தான் நாட்டு கொடி பயன்படுத்தப்பட்டதாக கூறும் புகைப்படங்கள் அடங்கிய பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் காங்கிரஸ் கொடி மட்டுமின்றி பச்சை நிற கொடி ஒன்றை ஏந்தி நிற்கின்றனர். வைரல் புகைப்படம், பாகிஸ்தான் கொடிகளுடன் இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பும் கட்சிக்கு வாக்களிப்பதை விட பெட்ரோலுக்கு கூடுதல் விலையை கொடுக்கலாம் எனும் தலைப்பில் பகிரப்படுகிறது.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், பேரணியில் உள்ள பச்சை நிற கொடி பாகிஸ்தான் நாட்டின் தேசிய கொடி இல்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் அது இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொடி ஆகும். மேலும் இதே தகவல் அடங்கிய வீடியோக்கள் 2018, 2019 ஆண்டுகளிலும் பகிரப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த பேரணி 2018 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் துவங்கும் முன் நடைபெற்றது.
அந்த வகையில் காங்கிரஸ் பேரணியில் பாகிஸ்தான் நாட்டு கொடி பயன்படுத்தப்படவில்லை என உறுதியாகிவிட்டது. மேலும் இந்த புகைப்படம் சமீபத்திய பேரணிகளில் எடுக்கப்படவில்லை என்பதும் தெளிவாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.