செய்திகள்
நிதிஷ்குமார்

எய்ம்சில் சிகிச்சை பெறும் லாலு பிரசாத் விரைவில் குணமடைய நிதிஷ்குமார் வாழ்த்து

Published On 2021-01-25 01:11 GMT   |   Update On 2021-01-25 01:11 GMT
டெல்லி எய்ம்சில் சிகிச்சை பெற்றுவரும் ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் விரைவில் குணமடைய வேண்டும் என முதல் மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பாட்னா:

கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ், உடல்நலக் குறைவு காரணமாக ராஞ்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் விமான ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் விரைவில் உடல்நலம் தேற அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், லாலுவின் அரசியல் எதிரியும், பீகார் முதல் மந்திரியுமான நிதிஷ்குமாரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லாலு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து அவரிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நிதிஷ்குமார், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்பது எனது தீவிர ஆசை என தெரிவித்தார்.

கடந்த 2018-ம் ஆண்டிலும் லாலுவின் உடல்நிலை மோசமடைந்தபோது, அடிக்கடி அவருடைய உதவியாளர்களை அழைத்து லாலுவின் உடல்நலம் குறித்து விசாரித்து வந்ததாக கூறிய நிதிஷ் குமார், இதற்காக பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்களையும் எதிர்கொண்டேன் எனவும் தெரிவித்தார்.
Tags:    

Similar News