செய்திகள்
மத்திய அரசு பாஸ்போர்ட்டில் அதிரடி மாற்றம் செய்துள்ளதாக வைரலாகும் தகவல்
இந்திய பாஸ்போர்ட்டில் மத்திய அரசு அதிரடி மாற்றத்தை செய்து இருப்பதாக கூறி வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
இந்திய பாஸ்போர்ட்டில் தேசியம் என்ற பிரிவை மத்திய அரசு நீக்கிவிட்டதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
"சட்ட அறிவிப்பு: மோடி அரசு இந்திய பாஸ்போர்ட்களில் இருந்து தேசியம் பிரிவை நீக்கிவிட்டது. பழைய பாஸ்போர்ட்களை தொலைக்கவோ அல்லது அழிக்கவோ செய்யாதீர்கள்." என கூறும் தகவல் வாட்ஸ்அப் செயலியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில் மத்திய அரசு, இந்திய பாஸ்போர்ட்டில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. இதுபோன்ற தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது செய்திகளில் அதிகளவு இடம்பெற்று இருக்கும். மேலும் அரசு சார்பில் அதிக விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும்.
எனினும், இணைய தேடல்களில் மத்திய அரசு பாஸ்போர்ட்டில் மாற்றம் செய்வதாக கூறும் தகவல் கிடைக்கப்பெறவில்லை. அந்த வகையில் மத்திய அரசு இந்திய பாஸ்போர்ட்களில் இருந்து தேசியம் பிரிவை நீக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.