செய்திகள்
கோப்புப்படம்

நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் ‘தபால் தலை’ வெளியிட்டதால் சர்ச்சை - விசாரணைக்கு உத்தரவு

Published On 2020-12-29 23:50 GMT   |   Update On 2020-12-29 23:50 GMT
நிழல் உலக தாதா சோட்டா ராஜன் புகைப்படத்துடன் தபால் தலை வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கான்பூர்:

தபால் துறையில் சில ஆண்டுகளுக்கு முன் ‘மை ஸ்டாம்ப்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் எந்த ஒரு தனிநபரும் தங்களது புகைப்படத்துடன் கூடிய தபால் தலையை பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தபால் அலுவலகம் நிழல் உலக தாதாக்களான சோட்டா ராஜன் மற்றும் முன்னா பஜ்ரங்கி ஆகியோரின் தபால் தலையை வெளயிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

‘மை ஸ்டாம்ப்’ திட்டத்தை பயன்படுத்தி யாரோ மர்மஆசாமி ஒருவர் தபால் அலுவலகத்தில் ரூ.600 கொடுத்து சோட்டாராஜன் மற்றும் முன்னா பஜ்ரங்கி ஆகியோரின் தலா 12 தபால் தலைகளை கான்பூர் தபால் அலுவலகத்தில் இருந்து பெற்று இருக்கிறார்.

தபால் நிலைய அதிகாரிகளின் இந்த அலட்சியமான செயல் தொடர்பாக தபால்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.

இதுதொடர்பாக ரஜ்னீஸ் குமார் என்ற அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். மேலும் அந்த தபால் அலுவலக ஊழியர்கள் சிலருக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

மேலும் தாதாக்களின் தபால் தலையை மோசடியாக பெற்ற மர்மஆசாமியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிழல் உலக தாதா சோட்டாராஜன் தற்போது மும்பை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். முன்னா பஜ்ரங்கி கடந்த 2018-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தின் பாக்பத் சிறையில் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News